சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜோ டி குரூஸின் மூன்றாவது நாவலான அஸ்தினாபுரம் சமீபத்தில் சென்னையில் வெளியிடப்பட்டது. ஆய்வாளர் கே ஆர் ஏ நரசய்யா இப்புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட எம்.நடராஜன் ஐ ஏ எஸ் அதைப் பெற்றுக் கொண்டார்.அவருடைய முதல் நாவல், ‘ஆழிசூழ் உலகு' கடற்கரை வாழ் சமூகத்தினரின் வாழ்க்கையைப் பதிவு செய்தது. இரண்டாவது நாவலான, 'கொற்கை' 2013- ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றது. அவருடைய முதல் இரண்டு நாவல்களின் தொடர்ச்சியாக மூன்றாவது நாவல் அஸ்தினாபுரமும் கடல் வாழ்க்கையைச் சித்தரிப்பது.
தன்னுடைய படைப்பைப் பற்றி ஜோ டி குரூஸ் கூறுகையில், ‘கடல், கப்பல் மற்றும் அதைச் சார்ந்த பயணங்கள், பிரச்னைகள் தான் அஸ்தினாபுரம் நாவலின் மையம். இந்தக் கடலும் கடல் சார் வாழ்வுமே என்னுடைய படைப்பு மொழி. பரந்த நீர்ப்பரப்பின் ஒரு துளியாகவே என் எழுத்து உள்ளது. இந்த நாவலும் அப்படியே. இதில் அரசியல் கருத்துக்களும் உண்டு’. என்றார் ஜோ டி குரூஸ்
கொற்கை நாவல் குறித்து கடந்த வருடம் கடுமையான விமரிசனங்களும் சர்ச்சைகளும் எழுந்தன. தமிழின் மீனவ மக்களின் வாழ்க்கையை எழுதிய முதல் மீனவர் ஜோ.டி.குரூஸ். ஆனால் மீனவ சமூகத்திற்கும் கிருத்துவ மதத்திற்கும் எதிராக எழுதினார் என்று எழுந்த சர்ச்சைகளால் ஜோ டி குரூஸ் நீதிமன்றம் வரை செல்ல நேர்ந்தது. ஆனால் அதைப் பற்றி தான் கவலைப்படவில்லை என்றார் அவர்.
அஸ்தினாபுரம் தனது கடைசி நாவல் என்றும் இதற்கு மேலாக தன்னிடம் சொல்வதற்கும் எழுதுவதற்கும் எதுவுமில்லை என்றார் ஜோ டி குரூஸ். ஆனால் பத்திரிகைகளுக்கும், இதழ்களுக்கும் நிச்சயம் எழுதுவேன். தவிர எழுதுவதை நிறுத்தப் போகிறேன் என்று அறிக்கை விட நான் ஒரு எழுத்தாளன் இல்லை, ஒரு சராசரி மனிதனின் பார்வையில் தான் என்னுடைய வாழ்பனுபவங்களைப் பதிவு செய்தேன். அதற்கு நாவல் ஒரு நல்ல வடிவமாக துணை நின்றது. போதும் என்ற அளவுக்கு எழுதி விட்டேன். இதற்கு மேல் சொல்வதற்கு என்னிடம் எதுவுமில்லை’ என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.