உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?
'மேக் மை ட்ரிப்' இந்தியா டிராவல் ரிப்போர்ட்- 2017 ன் படி;
- 45% மக்கள், விமானப் பயணத்தின் போதும் கூட வீட்டுச் சாப்பாட்டையே சாப்பிட விரும்புகிறார்களாம். அது மட்டுமல்ல;
- 42% மக்கள் குறைந்த கட்டணத் திட்டத்தில் விமானங்களில் Low Cost Carrier (LCC)) பயணிக்கையில் அங்கே விற்கப்படும் ஸ்னாக்ஸ் வகையறாக்களை வாங்கிப் பயன்படுத்த அறவே விரும்புவதில்லை.
- 85% மக்கள் விமான நிலையத்தினுள் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் விலை கூடுதல் என்பதோடு, அவை மிக அதிக விலை வைத்து விற்பனை செய்யப்படுகின்றன என்றும் கருதுகிறார்கள்.
- 45% மக்கள், விமான நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை தரமானவையாகக் கருதவில்லை. அதோடு கூட, அப்படிப்பட்ட தரமற்ற உணவுப் பொருட்களுக்கான விலையையும் கூட மிக அதிகமாக வைத்து விற்பனை செய்கிறார்கள் என 88 % மக்கள் கருதுகிறார்கள்.
- 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரையிலான விமானப்பயண அறிக்கைகளோடு இந்த ஆண்டு, அதாவது 2017 ஆம ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையிலான விமானப் பயண அறிக்கைகளை ஒப்பிட்டுப் பார்த்து உருவாக்கப்பட்ட இந்தியா டிராவல் ரிப்போர்ட்- 2017 ல் மேற்கண்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அந்த ரிப்போர்ட்டில் உள்ள மேலதிக விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்;
- விமானப் பயணிகளில் 44% பேர்கள் ஜன்னல் வழியே கீழே விரியும் அகண்ட வெளியைக் காணும் ஆர்வத்தைக் கைவிடாதவர்களாக இருக்கிறார்கள். பேருந்துப் பயணங்களைப் போலவே விமானப் பயணத்திலும் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டு பொழுதைக் கழிக்கும் ஆர்வம் 44% பேர்களுக்கு இருக்கிறது.
- 42% விமானப்பயணிகள் பிடித்த இசையைக் கேட்டுக் கொண்டே விமானத்தில் பயணிக்க விரும்புகிறார்கள். எனவும் அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதுமட்டுமல்ல;
- 35% விமானப் பயணிகள் விமானம் தரையிறங்கும் சமயத்தில், ஸ்விட்ச் ஆஃப் செய்த தங்களது அலைபேசிகளை உயிர்ப்பிக்க பைலட் அல்லது விமானப் பணிப்பெண்களின் அனுமதிக்காகக் காத்திருப்பதே இல்லை. அவர்களின் அறிவுறுத்தலோ, அனுமதியோ கிடைப்பதற்கு முன்பே பலரும் தங்களது அலைபேசிகளை இயக்கத் தொடங்கி விடுகிறார்கள்.
- 40% விமானப் பயணிகள், தங்களது பயண டிக்கெட்டுகளை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொண்டு போர்டிங் பாஸுடன் பயன்படுத்த விரும்புகிறார்கள் எனில் 56% பேர் தங்களது பயண டிக்கெட்டுகளை டிஜிட்டல் முறையில் மட்டுமே பதிவு செய்து வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.
- 36% விமானப் பயணிகள் மட்டுமே, விமான நிலையத்தினுள் இருக்கும் சுய சோதனை மையத்தைப் பயன்படுத்த விரும்புகிறார்கள்.
- 77% விமானப்பயணிகள், பயண நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே விமான நிலையத்தை அடைந்து விட விரும்புகிறார்கள்.
- முன்னதாக விமான நிலையத்தை அடைந்து, தங்களுக்குரிய விமானங்களுக்காக காத்திருக்கும் நேரத்தில், 46% பயணிகள் இணையத்தில் எதையாவது மேய்ந்து கொண்டிருக்கவும், 39% பயணிகள், தங்களது குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் அலைபேசியில் அரட்டை அடிக்கவுமாகப் பொழுதைக் கழிக்கிறார்கள்.
- விமானப் பயணிகளில் 46% பேர் ஜன்னலோர இருக்கையை மட்டுமே விரும்புகிறார்கள். 19% பேர் இருக்கையின் முன்னும், பின்னும் விசாலமான இடவசதி இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். 17% பேர் இருக்கை வசதிகளைப் பற்றீயெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.
- அதுமட்டுமல்ல, பெரும்பாலான விமானப் பயணிகள், லக்கேஜில் அதிக எடையைத் தவிர்ப்பதற்காக, ஹேண்ட் லக்கேஜ் என்ற பெயரில் கையோடு கொண்டு செல்லும் பைகளில் அதிக எடையைக் கூட்டிக் கொள்கிறார்கள். இப்படிச் செய்வதால்... அதிக எடைக்காக கூடுதல் கட்டணம் செலுத்தும் அவஸ்தை குறையுமெனக் கருதுகிறார்கள்.
- இந்த வரிசையில் மேலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 31% விமானப் பயணிகளுக்கு, இன்னமும் செக் இன் லக்கேஜின் மீது இணைக்கப்படும் ஃபிராஜில் டேக் பற்றிய விவரங்கள் எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதோடு 62% விமானப்பயணிகள் அந்த டேகைப் பயன்படுத்தாமலும் பயணிக்கிறார்கள் என்பது தான்!