இந்தியா என்பது புராதனமான நாடாகும். இங்கு பண்டையக்காலம் தொட்டே சைகை மொழி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சைகை மொழியில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய கீதத்தின் காணொலி கடந்த ஆண்டு வெளியானது. சுமார் 3.35 நிமிடம் ஓடக் கூடிய இந்த விடியோவை பிரபல திரைப்பட இயக்குநர் கோவிந்த் நிஹலானி இயக்கியுள்ளார். இதில் தில்லி செங்கோட்டையின் பின்னணியில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும், மாற்றுத் திறனாளி குழந்தைகளும் சைகை மொழியில் தேசிய கீதத்தை வழங்கியுள்ளனர்.
சைகை மொழியைச் சார்ந்துள்ளோருக்காக தேசிய கீதம் தயாரிக்கப்பட்டது பாராட்டுக்குரிய ஒன்றாகும். இந்தப் பிரிவில் வருவோரை நாம் ஊனமுற்றோர் என்று குறிப்பிட்டு வந்தோம். ஆனால் அதை மத்திய அரசு, மாற்றுத் திறனாளிகள் என்று மாற்றியது. இது மாற்றுத் திறனாளிகளின் வாழ்வைச் சுலபமாக்கும் முயற்சிகளில் ஒன்றாகும்.
இந்த முயற்சி அனைவராலும் பெரிதும் வரவேற்கப்பட்டது. வெளிவந்த நாள் முதல் தொடர்ந்து பலதரப்பிலிருந்து பாராட்டுக்களைப் பெற்றுவரும் காணொலி இது. இதை இயக்கிய கோவிந்த் நிஹலானி மற்றும் பங்களித்த அமிதாப் பச்சனையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.