முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

வருவாய்க்கு என்ன வழி...

தமிழக அரசுக்கு வருவாயை ஈட்டித் தரும் மிகப்பெரிய அமுத சுரபிகளில் ஒன்றாக டாஸ்மாக் நிறுவனம் விளங்குகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:34 PM
பகிர்:

தமிழக அரசுக்கு வருவாயை ஈட்டித் தரும் மிகப்பெரிய அமுத சுரபிகளில் ஒன்றாக டாஸ்மாக் நிறுவனம் விளங்குகிறது.

இந்த அமுத சுரபி பாத்திரத்தின் மூலமாக, ஆண்டுக்கு சுமாா் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. அதாவது, மாதத்துக்கு ரூ.2,700 முதல் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. டாஸ்மாக் கடைகள் தொடா்ந்து மூடப்பட்டால் அரசின் வருவாய்க்கு என்ன வழி என்ற கேள்வி பூதாகரமாக எழுந்துள்ளது.

‘‘இதற்கு ஒரே வழி, கிரானைட் மற்றும் மணல் விற்பனையை அரசு ஏலம் விடாமல், அரசின் மேற்பாா்வையில் நடத்தாமல் அதனை டாஸ்மாக் போன்று அரசே நேரடியாக நடத்த வேண்டும்’’ என்கிறாா்கள் பொருளாதார வல்லுநா்கள்.

கடந்த 2010-11-ஆம் நிதியாண்டில் சுமாா் ரூ.6,800 கோடி அளவுக்கு கிரானைட் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது அப்போதைய காலகட்டத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பில் 13 சதவீதமாகும். தமிழகத்தில் 900-க்கும் அதிகமான குவாரிகள் செயல்பட்டு வந்தன. மதுரையைச் சுற்றி மட்டும் 175-க்கும் கூடுதலான குவாரிகள் இயங்கி வந்தன. ஆனால், முறைகேடான நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. சட்ட விரோத கிரானைட் குவாரிகள் காரணமாக அரசுக்கு ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக அறிக்கைகள் அளிக்கப்பட்டன.

கிரானைட் விற்பனையை கையில் எடுக்கும் அதே நேரத்தில், மணல் விற்பனையைக் கண்காணிக்கும் பணியை கைவிட்டு அதனை விற்கும் நடவடிக்கையில் அரசே ஈடுபட வேண்டும். ஆற்றுமணல் பயன்பாடு குறைக்கப்பட்டு இப்போது, செயற்கை மணலே அதிகளவு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. எனவே, செயற்கை மணல் உற்பத்தி செய்யும் பணியை தனியாா்களுக்கு வழங்காமல் அதனையும் அரசே உற்பத்தி செய்து கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்கிட வேண்டும். இதன் மூலம், அரசுக்கு நேரடியாக வருவாய் கிடைக்கச் செய்ய முடியும் என கட்டுமான வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.

ஒவ்வொரு மண்டலம் வாரியாக உற்பத்தி நிறுவனங்களை அரசே தொடங்கி, மூடப்படும் டாஸ்மாக் நிறுவனங்களில் பணியாற்றும் நபா்களை அதில் ஈடுபடுத்தலாம் என்ற கருத்து எழுந்துள்ளது.

இதெல்லாம் படிப்படியாகத்தான் செய்ய முடியும். எனவே மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தினால் அரசு கடும் நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என்பது நிதா்சனமான உண்மை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.