முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளி ஆர்த்தி!

வாசனையான ஊதுவத்திகள், சாம்பிராணி, மாலை, அணிகலன்கள் என கலைநயத்துடன் தயாரித்து விற்பனை செய்து மாற்றுத்திறனாளிகளும் சொந்தக்காலில் நிற்க முடியும் என்று காட்டியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆர்த்தி.

Updated On : 3 டிசம்பர், 2022 at 5:40 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:29 PM

வாசனையான ஊதுவத்திகள், சாம்பிராணி, மாலை, அணிகலன்கள் என கலைநயத்துடன் தயாரித்து விற்பனை செய்து மாற்றுத் திறனாளிகளும் சொந்தக் காலில் நிற்க முடியும் என்று காட்டியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆர்த்தி.

சென்னை மாங்காடு அம்பாள் நகர் பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி (40) சந்தனம்,  மல்லிப்பூ என வாசனையான ஊதுவத்திகள், சாம்பிராணி, வீட்டு உபயோக மாலை, தோரணங்கள், பெண்கள் அணியும் அணிகலன்களை கலை நயத்துடன் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.

ஆர்த்தியின் தயாரிப்புகள்

அவரது சுயதொழில் குறித்து அவரது தாய் லட்சுமி கூறுகையில், 'ஆர்த்தி இரண்டரை வயதுக் குழந்தையாக இருக்கும்போதே அவரால் மற்ற குழந்தைகளைப்போல் துறுதுறுவென இருக்க முடியவில்லை, பேச முடியவில்லை. மருத்துவரை அணுகியபோது இதெல்லாம் ஒரு பிரச்னை இல்லை. ஆனால், மற்ற குழந்தைகளைப் போல அவரால் இயங்க முடியாது என்று கூறிவிட்டார். ஆகவே, மகளுக்கு உறுதுணையாக இருக்க என்னை அறிவுறுத்தினார்.

Advertisement

ஆர்த்தியை எட்டாம் வகுப்பிற்கு மேல் படிக்க கட்டாயப்படுத்த முடியவில்லை. மகளுக்கு கைத்தொழில் கற்பிக்கத் தரமணியில் ஒரு நிறுவனத்தில் சேர்த்து விட்டேன். ஆர்வத்துடன் சென்று கைத்தொழிலைக் கற்றுத் தேர்ந்தார். பின்னர் வீட்டில் இருந்தபடியே அவர் செய்யும் கைவினைப் பொருள்களை சென்னை வளசரவாக்கம் வெங்கடசுப்பிரமணியர் கோயிலில் செவ்வாய்க்கிழமை, கிருத்திகை நாட்களில் விற்பனைக்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறேன். இதன் மூலம் மாதம் 6,000 ரூபாய் வரை கிடைக்கும். மேலும், அரசின் உதவித்தொகையாக ரூ. 1,500 கிடைக்கிறது.

தற்பொழுது கோயிலில் படங்கள் புத்தகங்களையும் சேர்த்து விற்பனை செய்கிறோம். முறையாக நாங்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய வழிகாட்டினால் நிறைய சம்பாதிப்போம். நான் விஜயா மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றதால் அதில் வரும் ஓய்வூதியத்தையும் வைத்துக்கொண்டுதான் குடும்பத்தை சிரமத்துடன் பராமரிக்க வேண்டியுள்ளது' என்கிறார்.

எனினும், மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் உழைத்து சம்பாதித்து தன் தேவையை நிறைவேற்றிக்கொள்ளும் ஆர்த்தியை அப்பகுதி மக்கள் பலரும் பாராட்டுகின்றனர். 

ஆர்த்தியின் தயாரிப்புகளை வாங்க 7358677889, 9840682909 என்ற எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.