முகப்பு
கல்வி

பழைய மாணவர்கள் இனி எம்.பி.பி.எஸ். சேர முடியாது; ஜூன் முதல் வாரத்தில் விண்ணப்பம்

சென்னை, மே 7: "பழைய' பிளஸ் டூ மாணவர்கள் இனி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியாது. எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டில் மாணவர்களைச் சேர்க்க இந்த மாத இறுதியில் அறிவிக்கையை தமிழக சுகாதாரத் துறை வெளியிட உள்ளது

Updated On : 25 டிசம்பர், 2023 at 1:52 PM
பகிர்:

சென்னை, மே 7: "பழைய' பிளஸ் டூ மாணவர்கள் இனி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியாது.

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டில் மாணவர்களைச் சேர்க்க இந்த மாத இறுதியில் அறிவிக்கையை தமிழக சுகாதாரத் துறை வெளியிட உள்ளது. இதைத் தொடர்ந்து ஜூன் முதல் வாரத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கும்.

சர்ச்சைக்கு முடிவு: தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை நுழைவுத் தேர்வு இருந்தது. ஆனால் பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும்கூட, நுழைவுத் தேர்வில் மதிப்பெண் குறைவாகப் பெற்றதால் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியாத நிலை இருந்து வந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. வேறு படிப்புகளில் சேர்ந்த "பழைய' பிளஸ் டூ மாணவர்கள் இதைச் சாதகமாக்கிக் கொண்டு, எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரத் தொடங்கினர். இவ்வாறு "பழைய' மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ப்பதற்கு 2007-ம் ஆண்டு பிளஸ் டூ மாணவர்கள் ஆட்சேபம் தெரிவித்து உச்ச நீதிமன்றம் சென்றனர். ஆனால், மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தின் தகவல் குறிப்பேட்டில், "பழைய' மாணவர்கள் சேருவதற்கான தகுதி வாசகங்களைச் சுட்டிக்காட்டியும், அனைவருக்கும் விரும்பியதைப் படிக்க உரிமை உள்ளது எனக் கூறியும் "பழைய' மாணவர்களுக்குச் சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த ஆண்டும் (2008) பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ். 3-ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த சென்னை மாணவி, பிளஸ் டூ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பித்து, ரேங்க் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றார். ஆனால், சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் ஒதுக்கப்பட்டும் இறுதியில் சேரவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய "பழைய' மாணவர் சர்ச்சை எழுவதைத் தவிர்க்க, விண்ணப்பத்துடன் வெளியிடப்படும் தகவல் குறிப்பேட்டிலேயே மாற்றத்தைச் செய்ய மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.

அதாவது, நடப்பாண்டில் பிளஸ் டூ முடிக்கும் மாணவர்களின் வயது வரம்பை நிர்ணயித்து விண்ணப்பிக்கும் தகுதியை அறிவிக்க மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதன் மூலம் "பழைய' பிளஸ் டூ மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்க முடியாத நிலையை ஏற்படுத்த அது திட்டமிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →