லட்சியத்தை அடைந்து சாதனைபடைக்க, நம்மீது தொடுக்கப்படும் விமர்சனங்களை அலட்சியம் செய்துவிட்டு முன்னேறிச் செல்ல வேண்டும் என்றார் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற லில்லிகிரேஸ். துறையூர் பகுதியைச் சேர்ந்த இவர், குரூப் 1 தேர்வில் வென்று தமிழக காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பணிக்குத் தேர்வாகியுள்ளார்.
துறையூர் கிளை நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 4 இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று மாணவர்களிடையே லில்லி கிரேஸ் பேசியது: நாளிதழ் வாசிக்கும் பழக்கமுடைய தேர்வர்கள், போட்டித் தேர்வில் வெற்றிக்குத் தேவையான கணிசமான மதிப்பெண்களைப் பெறமுடியும். இதுதவிர, பாடத்திட்டத்தில் பரந்துபட்ட மற்றும் நுண்ணறிவு இருக்குமானால் வெற்றி எளிது. திரும்பத் திரும்பப் படிப்பது, சக தேர்வர்களிடம் விவாதிப்பது போன்றவை தவறுகளை திருத்தி, படித்தவற்றை மனதில் நிலைத்து நிற்கச்செய்யும்.
போட்டித் தேர்வுகளில் தோல்வியடையும் போதும் அண்டை வீட்டார்கள், நண்பர்கள் கேலிசெய்யலாம். அதை காதோடு நிறுத்திவிடுங்கள். மனதுக்கு கொண்டு செல்லாதீர்கள். வாழ்வில் வெற்றிபெற ஒரு வெற்றியுடன் திருப்தி அடையாதீர்கள். தொடர்ந்து முயன்று பல வெற்றிகளை பெறுங்கள் என்றார்.