பாஜகவுக்கு செலுத்தும் வாக்குகள் வீணாகும்! சசி தரூர்
கேரள மக்கள் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு வாக்களிக்க சசி தரூர் கோரிக்கை...
கேரளத்தில் பாஜகவுக்கு அளிக்கும் வாக்குகள் ’வீணாகப் போகும் வாக்குகள்’ என்று காங்கிரஸ் எம்பியும் மூத்த தலைவருமான சசி தரூர் விமர்சித்துள்ளார்.
கேரளத்தில் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஆளும் இடது ஜனநாயக முன்னணி, எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் மூன்றாவது அணியாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், கொல்லத்தில் பிரசாரம் மேற்கொண்டு வரும் சசி தரூர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
“கேரள தேர்தலில் நான் கவனம் செலுத்தி வருகிறேன். கேரளம், மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் என் நண்பர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
கேரள மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். பாஜக ஒரு முக்கிய போட்டியாளர் அல்ல. உண்மையான போட்டி ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும், இடது ஜனநாயக முன்னணிக்கு இடையேதான்.
எனவே, பாஜகவுக்கு அளிக்கும் வாக்கு வீணான வாக்கு. கேரள மக்கள் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
கேரளத்தில் பதிவாகும் வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.