கேரளத்தில் சசி தரூரின் பாதுகாவலர், ஓட்டுநர் மீது தாக்குதல்! ஒருவர் கைது!
கேரளத்தில் சசி தரூரின் பாதுகாவலர், ஓட்டுநர் தாக்கப்பட்டது குறித்து...
கேரளத்தில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டிருந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூரின் ஆயுதம் ஏந்திய பாதுகாவலர் மற்றும் கார் ஓட்டுநர் மீது 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில், வரும் ஏப். 9 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, மலப்புரம் மாவட்டத்தின் திருவாலி பகுதியில் வெள்ளிக்கிழமை (ஏப். 3) மாலை நடைபெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.பி. அனில் குமாரின் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் சசி தரூர் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, செலித்தோடு பாலத்தின் அருகில் 2 வாகனங்களில் வந்த சிலர் சசி தரூர் வாகனத்தின் பாதையை முடக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், அவரின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் பாதையைச் சரிசெய்ய முயன்றுள்ளார். அப்போது, அந்த நபர்கள் சசி தரூரின் பாதுகாவலர் மற்றும் ஓட்டுநரை தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்த நிலையில், சசி தரூரின் பாதுகாவலர் கே.பி. ரதீஷ் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவரைக் கைது செய்துள்ளனர். மேலும், குற்றம்சாட்டப்பட்டுள்ள 4 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சசி தரூர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“அவர் (பாதுகாவலர்) நலமாகவுள்ளார். எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி. நாங்கள் திட்டமிட்டபடி எங்கள் நிகழ்ச்சிகளை மேற்கொண்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கேரள தேர்தலில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.