திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ள விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி!
திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ள விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதைப் பற்றி...
திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் தலைவர் விஜய் செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக கட்சியின் பொதுச்செயலர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்துக்கு இன்று மதியம் வரும் விஜய், அங்கிருந்து கொச்சின்-சேலம் 6 வழிச் சாலை வழியாக அவிநாசி செல்கிறார். அதைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளா்களை ஆதரித்து, அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே விஜய் பிரசாரம் (சாலை வலம்) செய்கிறார்.
அதைத்தொடர்ந்து பெருமாநல்லூர் நான்கு வழிச்சாலை சந்திப்பில் திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசுகிறார்.
Advertisement
இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலர் என். ஆனந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “கட்சித் தலைவர் விஜய், இன்று (ஏப். 14) திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் முதல் பூலுவபட்டி பிரிவு வரை மதியம் 2 மணி முதல் வாகனத்தின் வாயிலாக தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது.
இதை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும். அத்தோடு தேர்தல் ஆணைய விதிகளை பின்பற்றுமாறும், குறிபிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே வந்து காத்துக்கொண்டிருப்பதைத் தவிர்க்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.