விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000! வேளாண் கடன் தள்ளுபடி!
திருப்பூர் பிரசாரத்தில் விவசாயிகள், காவல் துறைக்கு விஜய் அளித்த வாக்குறுதிகள் குறித்து...
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தில் விவசாயிகள், காவலர்களுக்கான தவெக திட்டங்கள் குறித்து விஜய் பேசியதாவது:
''5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.
Advertisement
5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் வேளாண் கூட்டுறவு கடன் பகுதியளவு தள்ளுபடி செய்யப்படும்.
குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்.
நெல் குவிண்டாலுக்கு 3500 ரூபாயும், கரும்பு டன் ஒன்றுக்கு 4500 ரூபாயும் வழங்கப்படும்.
குத்தகை விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 ஆதரவுத் தொகை.
பயிர் காப்பீடு திட்டத்தின்படி 100% பயிர் பாதுகாப்பு செய்யப்படும்.
நமது அரசு ஊழியர்களின் நலனுக்காக பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் வழங்குவது குறித்து பரிசீலனை மற்றும் மதிப்பீடு செய்யும்.
5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தொடர்ச்சியாக அரசுப் பணிநிறைவு செய்துள்ள தற்காலிக ஆசிரியர்கள், செவிலியர்கள், எழுத்தர்களை பணி நிரந்தரம் செய்யும்.
பதவி உயர்வுக்கு பணம் பெறும் கலாசாரத்தை தவெக அரசு முடிவுக்கு கொண்டுவரும்.
அரசு ஊழியர்களின் இடமாற்றம், காலவரையறைக்கு உட்படுத்தப்பட்டு வெளிப்படையாக நடக்கும்.
காவலர்களின் அடிப்படை மாத ஊதியத்தை 18 ஆயிரத்தில் இருந்து , 25 ஆயிரம் ரூபாயாக தவெக அரசு உயர்த்தும்.
அழுத்தம் நிறைந்த பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு பணிப் படியாக மாதம் ரூ. 1000 கூடுதலாக வழங்கப்படும்
காவலர்களின் நலன் மற்றும் பணி பாதுகாப்பு சட்டத்தை தவெக இயற்றும். இதன்படி, காவலர்களின் பணி நேரங்கள் முறைப்படுத்தப்படும்.
வாரம் ஒரு நாள் விடுமுறை உறுதிப்படுத்தப்படும். சலவைப் படி ரூ. 500லிருந்து ரூ. 1000 ஆக உயர்த்தப்படும்.
மதுரை, கோவை, நெல்லை,சேலம் வேலூர் ஆகிய இடங்களில் காவலர் நல மருத்துவமனைகள் நிறுவப்படும்.
பெண் காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளுக்கு பணியமர்த்தப்பட மாட்டார்கள். தனி ஓய்வறைகள், நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்படும்'' என விஜய் வாக்குறுதி அளித்தார்.