முகப்பு
வேலைவாய்ப்பு

சிறப்பாசிரியர் தேர்வில் தமிழ்வழி ஒதுக்கீடு கோருபவர்கள் சான்றிதழ் நகல்களை சமர்ப்பிக்கவும்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

தையல், ஓவியம், உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வில் தமிழ்வழி ஒதுக்கீடு கோருபவர்கள் சான்றிதழ் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:29 PM
பகிர்:


சென்னை: தையல், ஓவியம், உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வில் தமிழ்வழி ஒதுக்கீடு கோருபவர்கள் சான்றிதழ் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:  கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தையல் பாடத்துக்கு 9.9.2029 அன்றும், ஓவிய பாடத்துக்கு 18.10.2019 அன்றும், உடற்கல்வி பாடத்துக்கு 28.10.2020 அன்றும் தேர்வுப்பட்டியல் வெளியானது.

இந்த மூன்று தேர்வு பட்டியல்களிலும் தமிழ்வழி ஒதுக்கீடு, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகிய சிறப்பு ஒதுக்கீடுகளில் ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்ட விண்ணப்பத்தாரர்களில் தகுதியானோர் கிடைக்காததால் பெரும்பாலான இடங்கள் ஒதுக்கீடுசெய்யப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து ஏற்கனவே நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தகுதியில்லாததன் காரணமாக புதிதாக மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வேண்டியுள்ளது. 

இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன்னரே விண்ணப்பதாரர்களிடம் உரிய சான்றிதழ்களை பெற ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. 

அதன்படி, தமிழ்வழி ஒதுக்கீடு, முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடுகளில் ஒதுக்கீடு கோரிய நபர்களில், அச்சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டிய விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பாடப்பிரிவு வாரியாக வெளியிட்டுள்ளது. அந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் குறிப்பிட்ட தேதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் உரிய சான்றிதழ்களின் சான்றொப்பம் பெறப்பட்ட 2 நகல்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்படி, ஓவிய பாடத்துக்கு புதன்கிழமை(பிப்.10), உடற்கல்வி பாடத்துக்கு வியாழக்கிழமை(பிப்.11) தையல் பாடத்துக்கு வெள்ளிக்கிழமை (பிப்.12) சான்றிதழ் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ஓவியம், தையல் பாடப்பிரிவுகளில் டிடிசி படித்தவர்களால் ஹையர் கிரேடு தேர்வுக்கு தமிழ்வழி சான்றிதழ் வழங்க இயலாது. எந்த தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கும் ஹையர் கிரேடு தேர்வுக்கு பாடம் நடத்துவதற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை என்று அந்த அறிக்கையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுப்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.