5.4.1976: திருவண்ணமலை கும்பாபிஷேகம்: 5 லட்சம் பேர் தரிசித்தனர்
திருவண்ணமலை கும்பாபிஷேகம் பற்றி...
திருவண்ணாமலை. ஏப். 4- திருவண்ணாமலையில் அருணாசலேசுவரர் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. 5,00,000 க்கும் அதிகமான பக்தர்கள் கும்பாபிஷேக வைபவத்தைக் கண்டு களித்தனர்.
காலை 8-45 மணி முதல் 9 மணி வரை 15 நிமிஷ நேரத்துக்கு ஆலயத்தின் 9 கோபுரங்களின் உச்சியில் உள்ள கலசங்களுக்கு அபிஷேகங்கள் நடந்தன. அப்போது 5 லட்சம் பக்தர்கள்களும் 'ஹரஹர மகாதேவா' என்று கோஷமிட்டனர்.
கும்பாபிஷேக வைபவம் துவங்குவதற்கு அடையாளமாக 51 வெடிகள் வெடிக்கப்பட்டன. நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் நாதஸ்வரம் வாசிக்க ஸ்வாமி பஞ்சநாத தேசிகர் தலைமையில் 69 ஓதுவார்கள் தேவாரம் ஓதிக் கொண்டிருந்தார்கள்.
Advertisement
அருணாசலேசுவரர் ஆலயப் பகுதியில் எங்கு பார்த்தாலும், மக்கள் வெள்ளத்தைத் தான் காண முடிந்தது. நகரில் நடமாடுவதற்கே துளிக்கூட இடமில்லாத வகையில் மக்கள் கடலெனத் திரண்டிருந்தனர்.
கும்பாபிஷேகம் துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக இந்த வைபவம் நடக்க விருப்பதை அறிவிப்பதுபோல ஆலயப் பகுதியில் வானில் இரு கருடன்கள் வட்டமிட்டன.
மதுரை கூடலழகர் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது
மதுரை, ஏப். 4- தமிழ்நாட்டில் உள்ள மிகப் புராதன கோவில்களில் ஒன்றான ஸ்ரீ கூடல் அழகர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று (ஞாயிறு) காலை 8-45 மணிக்கு இங்கு நிகழ்ந்தது.
ஸ்ரீ கூடலழகர் கோவிலின் வரலாறு தெரிந்த காலத்திலிருந்து இதுவரை அக்கோவிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.
சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் கூடியிருந்து கும்பாபிஷேகத்தை தரிசித்தனர்.
மதுரையிலிருந்து சுமார் 10 மைல் தூரத்தில் இருக்கும் அழகர் மலை நூபுர கங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தம் சுமார் ஒரு வாரமாக யாகசாலையில் வைக்கப்பட்டுப் பூஜைகள் நடத்தப்பட்டன. அத் தீர்த்தம் இன்று அதிகாலையில் கோபுரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. சரியாக 8-45க்குப் பச்சைக் கொடி காட்டியவுடன் ராஜ கோபுரம் உள்பட 5 கோபுரங்களிலும் ஒரே சமயத்தில் அபிஷேகம் நடந்தது. இந்த மகா கும்பாபிஷேகம் சம்பந்தமான வைதீகக் காரியங்கள் எல்லாவற்றிற்கும் பொறுப்பாக ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த ஸ்ரீ அலங்கார பட்டர் இருந்தார். கூடலழகர் கர்ப்பக்கிரஹத்தின் மீதுள்ள அஷ்டாங்க விமானத்தின் மீது அவர் புனித தீர்த்தத்தை ஊற்ற, ராஜகோபுரத்தின் மீதிருந்த கள்ளழகர் கோவில் தலைமைப் பட்டர் பூஜைகளை நடத்தினார். வேதங்கள் முழங்க, நாதஸ்வரம் இசைக்க அபிஷேகம் நிகழ்ந்தது.