7.4.1976: காந்திஜி கொலை சதி தகவல் - 3 போலீஸ் அதிகாரிகளுக்கு முன்னதாகத் தெரியுமாம்
காந்திஜி கொலை சதி தகவல் 3 போலீஸ் அதிகாரிகளுக்கு முன்னதாகத் தெரிந்தது பற்றி...
புனா, ஏப்: 6 - 1948 ஜன 31க்குப் பின்னர் மகாத்மா காந்தியை கொலை செய்வது என்ற சதி குறித்து மூன்று உயர் போலீஸ் அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்ததாக நேற்று இங்கு கோர்ட் விசாரணையின்போது அதிகாரப்பபூர்வமான ஒப்புதல் வந்தது.
ஜூடிஷியல் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஜி. வி. கேட்கர் வழக்கு விசாரணையின்போது புலன் விசாரணை அதிகாரி மட் பித்ரி தொடர்ந்து குறுக்கு விசாரணை செய்யப்பட்டார். டில்லியில் அதுசமயம் போலீஸ் ஐ.ஜி.யாக இருந்த டி.ஜி. சஞ்சீவி, பம்பாயில் டிபுடி போலீஸ் சூப்பிரண்டெண்டாக இருந்த நகர்வாலா, புனாவில் தலைமை அலுவலகத்தைக் கொண்டிருந்த பம்பாய் மாகாண டி.ஐ.ஜி. வி.எச். ராணா ஆகிய மூவருக்கும் முன்கூட்டியே தகவல் தெரியும் என்று மட்பித்ரி தெரிவிக்தார்.
பம்பாயில் மகாத்மா காந்தி பிரார்த்தனைக் கூட்டத்தின் போது வெடிவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மதன்லால் பஹ்வா ஜன.20ல் போலீஸாரிடம் சதிகாரர்களின் பெயர்களைத் தெரிவித்தார். மதன்லால் பஹ்வாவின் பதிவு செய்யப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை தற்போதைய வழக்கில் சமர்ப்பிப்பது அவசியம் என்று தாம் கருதவில்லை என சாட்சி கூறினார். நகர்வாலா வாக்குமூலத்தை தாம் பதிவு செய்ததாகவும், ஆனால் சாட்சியாக அவரை அழைக்கவில்லை என்றும் மட்பித்ரி குறிப்பிட்டார்.
Advertisement
பம்பாய் மாகாண பிரதம மந்திரியாக இருந்த பி.ஜி. கெர்ருக்கு புனா காங்கிரஸ் தலைவர் பாலுகாகா கானட்கர் எழுதிய கடிதம் இவ்வழக்கில் பிராஸிகியஷன் தரப்பு தாக்கல் செய்யவில்லை என்றும், ஏனெனில் கெட்கர் மீதான வழக்கை கடிதம் குலைத்துவிடும் என்றும் எதிரிதரப்பு வக்கீல் பரஞ்சயே கூறினார்.
மட்பித்ரி இதனை மறுத்தார்.
மகாத்மா காந்தியைக் கொலை செய்யும் சதி பற்றி கெர்ருக்கு கானட்கர் எச்சரித்திருந்தார். இக்கடிதம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் கேட்கர் தூண்டுதலின் பேரில் இக்கடிதம் எழுதப்பட்டது என்பது தெளிவாக்கப்பட்டிருக்கும் என்று பரஞ்சபே குறிப்பிட்டார்.
காந்திஜியைக் கொலை செய்யும் சதி பற்றி முன்னதாகவே அறிவித்திருந்த தகவலை போலீஸாரிடம் மறைத்தார் என்று 79 வயது கேட்கர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருப்பது நினைவிருக்கலாம்.