1.4.1976: அணுகுண்டு யுத்தம் ஏற்படக் கூடிய அபாயம்
அணுகுண்டு யுத்தம் ஏற்படக் கூடிய அபாயம் குறித்து விஞ்ஞானிகள்...
லண்டன், மார்ச். 30 - அணுகுண்டு யுத்தம் ஏற்படக் கூடிய சாத்தியம் இருக்கிறது என்றும், அணுகுண்டு யுத்தம் ஏற்படும் என்று தோன்றுகிறது என்றும் நான்கு பிரபல அமெரிக்க விஞ்ஞானிகள் திங்கட்கிழமை இரவு லண்டனில் ஒரு டெலிவிஷன் நிகழ்ச்சியில் பங்கு கொண்டபோது எச்சரித்தார்கள்.
வல்லரசுகள் அணு ஆயுத உற்பத்தி சாதனங்களை உலக நாடுகளுக்கு விற்பனை செய்வதை நிறுத்த சர்வதேச அளவில் மக்கள் இயக்கம் நடைபெற வேண்டும் என்றும், உலகில் உள்ள புளூடோனியம் அனைத்தையும் சர்வதேசக் கட்டுப்பாட்டின் கீழ் சேமித்து வைக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
பயங்கரமாகவோ, தாறுமாறாகவோ அல்லது பைத்தியக்காரத்தனமாகவோ நடந்துகொள்ளக் கூடிய அரசாங்கத் தலைவர் ஒருவரிடம் அணுகுண்டு கிடைத்துவிடக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்தார்கள்.
அணு சம்பந்தமான அறிவை இதர நாடுகளுக்குப் பரப்புகின்ற நாடுகளில் இந்தியா ஒன்று என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். அர்ஜென்டைனாவுடன் இந்தியாவின் ஒத்துழைப்பை சுட்டிக்காட்டினார்கள்
பிரான்ஸ் அணு ரியாக்டரை பாகிஸ்தானுக்கும், லிபியாவுக்கும் விற்பனை செய்வது பற்றி அவர்கள் கவலை தெரிவித்தார்கள்.
அணு ஆயுதங்கள் பெருகும் நிலையில், அணு விசை உடன்பாடுகளின் பயன்கள் சொற்பமானவை என்று அவர்கள் கூறினர். ...
அரசு ஊழியர்களுக்கு நிர்வாக டிரிப்யூனல் ஏற்படுமா?
புது டில்லி, மார்ச். 31- அரசு உத்யோகம் சம்பந்தமான விஷயங்களை கோர்ட்டுகளின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டதாக்கி, இவற்றைக் கவனிக்க நிர்வாக டிரிப்யூனல்களை ஏற்படுத்துவது பற்றி விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, லோக்சபையில் உள் நாட்டிலாகா துணை அமைச்சர் ஓம் மேத்தா அறிவித்தார்.
உள்துறைக்கான மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் ஓம் மேத்தா குறுக்கிட்டுப் பேசினார். இத்தகைய ஏற்பாடு அரசு ஊழியர்களுக்கு மிகவும் துரிதமான, இன்னும் பலனுள்ள பரிகாரத்தை அளிக்கும் என்று வாதிக்கப்படுவதாக அவர் கூறினார்.
இப்போது கோர்ட்டுகளில் இத்தகைய வழக்குகள் ஏராளமாகக் குவிந்திருப்பதாகவும், ரிட் மனுக்கள் மூலம் இந்த வழக்குகள் போடப்பட்டிருப்பதாகவும் சுட்டிக் காட்டப்படுவதாக ஓம் மேத்தா கூறினார். இப்போதைய நிலைமையால் பல திருப்தியளிக்காத விளைவுகள் இருப்பதாகவும் இவை கட்டுப்பாட்டையும், திறமையையும் பாதிப்பதாகவும் கூறினார்.
நிர்வாகத்தின் தரத்தை அபிவிருத்தி செய்ய சமீபத்திய மாதங்களில் பல நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அமைச்சர் கூறினார். ...