முகப்பு
மருத்துவம்

வலிப்பு நோய் ஏற்படுவது ஏன்? மருத்துவர்கள் விளக்கம்

அதிக சூடான நீரில் குளித்தல், சர்க்கரை நோய், விபத்து போன்ற காரணங்களால் வலிப்பு நோய் உண்டாகும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On : 19 நவம்பர் 2013, 7:26 am IST
பகிர்:

அதிக சூடான நீரில் குளித்தல், சர்க்கரை நோய், விபத்து போன்ற காரணங்களால் வலிப்பு நோய் உண்டாகும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசிய வலிப்புநோய் தினத்தை முன்னிட்டு சென்னை மருத்துவக் கல்லூரி நரம்பியல் துறை  சார்பில் திங்கள்கிழமை நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துறைத்தலைவர் டாக்டர் கே.பானு கூறியது:

கடந்த ஆண்டு மட்டும் 40,555 வலிப்பு நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். சிறுகுழந்தைகளுக்கு நோய்த்தொற்றின் காரணமாகவும், இளம் வயதினருக்கு தலைக் காயங்களினாலும், நடுத்தர மற்றும் வயதானவர்களுக்கு ரத்த அழுத்தம், கட்டிகள், சர்க்கரை நோய், கால்சியம் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் வலிப்பு நோய் தாக்கும். வெந்நீரை அதிக சூட்டில் வைத்து குளித்தாலும் இந்த நோய் தாக்கும்.

Advertisement

Advertisement

பெண்களைப் பொருத்தவரையில் மாதவிடாய் குறைபாடுகளால் வலிப்பு நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது.

திருமணம் செய்வதற்கோ, குழந்தை பெறுவதற்கோ வலிப்பு நோய் ஒரு தடையல்ல. வலிப்பு நோய் உள்ளவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம்.

இதில் 85 சதவித வலிப்பு நோய்களுக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மருந்து உட்கொண்டால் போதுமானது.

மீதம் 15 சதவித வலிப்பு நோய்களுக்கு வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுóத்துக் கொள்ள வேண்டும்.

மருத்துவர்கள் ஆலோசனையின்றி மருந்துகளை நிறுத்தக் கூடாது என்றார்.

கல்லூரி முதல்வர் டாக்டர் கனகசபை பேசுகையில், "வலிப்பு நோய் வந்தவர்களுக்கு கையில் சாவிக் கொத்தை கொடுப்பதும், வாயில் மரக்கட்டையை வைப்பது மிகவும் தவறான அணுகுமுறை.

வலிப்பு நோய் வந்தவர்களை இடதுபுறமாக ஒருசாய்த்துப் படுக்கவைத்து வாயில் ரப்பர் போன்ற பொருளைக் கொடுத்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்'என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.