பிறவியிலேயே நுரையீரல் வால்வு சுருங்கிய நிலையில் இருந்த 37 வயது பெண்ணுக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பலூன் சிகிச்சையின் மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டது.
துரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் விஜயலெட்சுமி (37). இவருக்கு கடந்த 1999-ஆம் ஆண்டு, முதல் குழந்தை பிறந்தது. அப்போது அவரது நுரையீரல் வால்வு சுருங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிறவிக் குறைபாடாக இருந்தாலும் அவரின் 22-ஆவது வயதில்தான் அந்தக் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டது.
நுரையீரல் வால்வு சுருங்கியிருந்ததால் இதயத்தில் வலது பகுதியிலிருந்து நுரையீரலுக்கு பிராண வாயு செல்வது தடைப்பட்டது. இதனால் அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சுமார் 15 ஆண்டுகளாக இதே நிலையில் அவர் சிரமப்பட்டார்.
அறுவைச் சிகிச்சைக்குத் தயார் நிலையில் அவரது உடல்நிலை இல்லை என்ற காரணத்தினால் பல்வேறு மருத்துவமனைகளை அணுகியும் அவருக்கு சிகிச்சையளிக்க யாரும் முன்வரவில்லை. இதற்கிடையில் இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த ஜூலை மாதம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலையை ஸ்திரப்படுத்துவதற்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு ஒரு மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து மருத்துவமனையின் இதய சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் கண்ணன் கூறியது:
விஜயலெட்சுமிக்கு பலூன் சிகிச்சை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது. அவரின் தொடைப் பகுதியில் உள்ள ரத்த நாளத்தின் வழியாக இதயத்துக்கு சிறிய பலூன் கொண்டு செல்லப்பட்டு, நுரையீரல் வால்வின் அருகே அதை விரிவடையச் செய்தோம். இதனால் சுருங்கியிருந்த நுரையீரல் வால்வு விரிவடைந்து, ரத்த ஓட்டம் செல்ல ஆரம்பித்தது.
இந்தச் சிகிச்சையின்போதே இரண்டு முறை நோயாளியின் இதயத் துடிப்பு சீர் குலைந்தது. பலூன் சிகிச்சையின்போதே இதயத் துடிப்பைச் சீராக்க "ஷாக் ட்ரீட்மெண்ட்' மற்றும் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
சிகிச்சை முடிந்து விஜயலட்சுமி உடல் நலம் தேறி வருகிறார். இன்னும் சில நாள்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.