செய்திகள்

மூலநோய் பிரச்னையா? கட்டாயம் இதையெல்லாம் தவிர்த்துவிடுங்கள்

தினமணி

மூல நோய் உள்ளவர்கள்

ஹெமராய்ட்ஸ் (Hemorrhoids) அல்லது பைல்ஸ் (piles) என்று ஆங்கிலத்திலும் மூலம் என்று தமிழிலும் நாம் சொல்லக்கூடிய வார்த்தையானது ஒரு நோயைக் குறிப்பிடுவது அல்ல என்பதே அதிகம் பேருக்குத் தெரிவதற்கு வாய்ப்பில்லை. பெருங்குடலின் அடிப்பகுதி மற்றும் மலப்புழையைச் சுற்றியுள்ள சுவர்களின் மென்மையான தசைகளுக்குள் பதிந்துள்ள ரத்த நாளங்களே மூலம் என்றும் ஆங்கிலத்தில் பைல்ஸ் என்றும் மனித உடற்கூறியியலில் அழைக்கப்படுகிறது. இந்த மூலங்களில், நாட்பட்ட உராய்வு, சீராய்ப்பு, அழற்சி ஏற்படுவதால், அவை வீக்கமடைந்து, ரத்தக்கசிவுடன் பெரியதாகும்போதுதான் மென்மையான தசைபோன்ற ஒன்று மலத்துவாரத்தின் உள்ளும் வெளியிலும் உருவாகி பிரச்னையை ஏற்படுத்துகின்றது. பெருங்குடலின் கடைசி பாகத்தில் (Rectum) இந்த அழுத்தம் அதிகமானால், ரத்தக் கசிவுடன் அழற்சி ஏற்படுகிறது. இந்த நிலை வந்த பின்புதான் அதை மூலநோய் (மூலத்தில் ஏற்பட்ட நோய்) என்று நாம் கூறுகிறோம்.

மூலநோய் வருவதற்கான காரணங்கள்

மூலநோய் ஏற்படக் காரணமாக இருக்கும் பெருங்குடலில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தத்திற்கும், அழற்சிக்கும், நாட்பட்ட மலச்சிக்கல், நாட்பட்ட வயிற்றுப்போக்கு, அதிக எடை தூக்கும் வேலை செய்தல், கர்ப்பகாலம், மிகுந்த சிரமத்துடனும், அழுத்தத்துடனும் மலத்தை வெளியேற்றும் பழக்கம் போன்றவை காரணங்களாகின்றன. எந்த வயதிலும் வரக்கூடிய மூலநோய், வயதானவர்களைத்தான் அதிகம் பாதிக்கிறது. முதுமைப் பருவத்தில் உள்ளவர்களின் ரத்த நாளங்களில் ஏற்படும் பலவீனம், அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பது, மலம் கழிப்பதைத் தள்ளிப் போடுவது, உடல் பருமன், கல்லீரல் அழற்சி, நார்ச்சத்து குறைவான உணவு, அதிக கொழுப்புள்ள உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, உடலில் நீர் பற்றாக்குறை, குடல் சம்பந்தமான பிற நோய்கள், அதிக மன அழுத்தம், பொதுவாகவே குறைந்த நோய் எதிர்ப்புச் சக்தியுடன் உடல் மெலிந்து இருத்தல் போன்றவை மூலத்தை ஏற்படுத்தி அன்றாட வாழ்க்கையையும் சிக்கலாக்கி விடுகின்றது. 

மூலநோயின் அறிகுறிகள்

மலப்புழையைச் சுற்றிலும் சிவந்திருத்தல், மலப்புழையில் லேசான மற்றும் அதிகமான வலி, மலம் வெளியேறும்போது வலி மற்றும் ரத்தக்கசிவு, குதத்தைச் சுற்றி வீக்கம், எரிச்சல், அரிப்பு, தொட்டு உணரக்கூடிய அளவில் வலியுடன்கூடிய சதை போன்ற சிறிய கட்டிகள் (அவை உறைந்துபோன ரத்தக் கட்டிகளாகும்), மலம் வெளியேறியபின் சளிபோன்ற திரவம் வடிதல் 

மூலநோயையும் அதற்குக் காரணமான மலச்சிக்கலையும் தடுக்கும் நார்ச்சத்தின் அவசியம்

ஆரோக்கியமாக இருக்கும் ஒரு நடுத்தர வயது மனிதனுக்கு பரிந்துரைக்கப் பட்ட நார்ச்சத்தின் அளவு ஒரு நாளைக்கு 30 கிராம் அல்லது அவரது 1000 கிலோ கலோரிக்கு 12 கிராம் என்பதாகும். இந்தியாவின் சைவ உணவுகள் ஒரு நாளைக்கு 225 கிராம் மலத்தை உருவாக்கும் தன்மையையும், அயல் நாட்டு உணவுகள் 80 முதல் 170 கிராம் மலத்தை உருவாக்கும் தன்மையையும் பெற்றிருக்கின்றன. மலத்தின் அளவு 100 கிராமுக்குக் கீழே குறையும்போது, குடலில் கழிவுகள் தேங்கி, மலத்தின் அளவு, வெளியேறும் இடைவெளி மற்றும் நேரம்; குறைந்து, இறுக்கமடைந்து, மிகுந்த சிரமத்துடன் வெளியேற்றப்படுகிறது. ஆனால், போதுமான அளவு நார்ச்சத்து உணவுகளை உண்ணும்போது, கழிவுப்பொருட்கள் குடலின் வழியாக நகரும் நேரம் குறைக்கப்படுவதுடன், மலத்தின் அளவு அதிகரித்து, உடனுக்குடன் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. 

மூலநோயைத் தடுக்கும், குணப்படுத்தும் உணவுகள்

ஓட்ஸ், பார்லி, உளுந்து போன்ற பிசின் போன்ற திரவப் பொருள் அதிகமாக இருக்கும் உணவுகளில் ஒன்றையாவது தினமும் உண்ண வேண்டும்.

தாவரங்களின் செல்களை இணைக்கும் பசை போன்ற பொருளான பெக்டின் (Pectin) கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆப்பிள் ஆகியவற்றில் இருக்கின்றது. கரையக் கூடிய தன்மையுள்ள இந்த நார்ச்சத்தானது, மலத்தை குழகுழப்புத் தன்மையுடன் மென்மையாக்கி, இறுகிய மலத்தைத் தவிர்த்து, பெருங்குடலிலும் மலக்குடலிலும் மலமும் நச்சும் தேங்காமல் இருப்பதற்கு உதவி புரிகிறது. 

கரையாத நார்ச்சத்தாகிய செல்லுலோஸ் (Cellulose) என்னும் பொருள் தவிடு நீக்காத கோதுமை, அரிசித் தவிடு, காய்களின் மென்மையான தோல், தோல் நீக்கப்படாத முழு பருப்பு வகைகள் ஆகியவற்றில் அதிகமாக காணப்படுகின்றன. இவை, குடலில் நீரை உறிஞ்சி, மலத்தின் அளவை அதிகப்படுத்தி, நச்சுப்பொருட்களை வடிகட்டி எளிதில் வெளியேற்றிவிடுகின்றன. இதனால், குடலின் சுவர்கள் சீராய்ப்பு இல்லாமல், மலப்புழை நரம்புகளும், ரத்தக்குழாய்களும் பாதுகாக்கப்படுகின்றன.

பச்சையான வெண்டைக்காய், தக்காளி, கேரட், முளைக்கட்டிய வெந்தயம், உளுந்து, கொண்டைக்கடலை போன்றவற்றை தினந்தோறும் உணவில் சேர்க்க வேண்டும்.

ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று வேளைகள் பழங்களைக் கட்டாயம் உண்ண வேண்டும். பழச்சாறாக அருந்தாமல், பழமாக அப்படியே சாப்பிடுவதால், போதுமான நார்ச்சத்து எளிதாகக் கிடைக்கும்.

காலையில் பல் துலக்கியவுடன், கொதிக்க வைத்து ஆறவைத்த வெதுவெதுப்பான நீரை ஒன்று அல்லது இரண்டு டம்ளர்கள் அளவில் பருக வேண்டும். இதனால் உணவுக்குழாய் முதல் மலக்குடல் வரையுள்ள வாயுக்களும் நச்சுக்களும் நீங்கப் பெறும்.

தயிர் அல்லது மோரை தொடர்ச்சியாக பருகுவதால் எரிச்சலும் புண்களும் குறைக்கப்பட்டு, பெருங்குடலுக்குத் தேவையான நல்ல பாக்டீரியாக்கள் உருவாக்கப்பட்டு, நச்சுக்கள் நீங்கி குடல் சுத்தமடைவதால், உள் மூலத்தில் உள்ள சீராய்ப்புகள் குணமடையும்.

சிறிதளவு தேங்காயை அப்படியே மென்று சாப்பிடுவதும், தேங்காய்ப்பால் அருந்துவதும் வீக்கத்தையும் புண்ணையும் குணப்படுத்தும். 

வீட்டில் சமைக்கப்படும் உணவாக இருந்தாலும் காரம், புளிப்பு, உப்பு அதிகம் சேர்ப்பதையும் சூடான உணவுகளை அவசரமாக சாப்பிடுவதையும் தவிர்த்தல் நலம் பயக்கும்.

காயங்களும், சீராய்ப்புகள், வலி அதிகமான இருப்பின், கீரைகளை தவிர்ப்பது நல்லது. இவை ரத்தப்போக்கையும், வலியையும் மேலும் அதிகமாக்கக் கூடும். மூலநோய் வருவதற்கு முன்னரே சரியான முறையில் கீரை சேர்த்த உணவுகளை எடுத்துக் கொள்வதால், மலச்சிக்கலைத் தவிர்த்து மூலநோயையும் தடுக்கலாம்.

மலச்சிக்கலுடன் சேர்ந்த ஆரம்ப நிலை மூலநோய் இருப்பதை அறிந்தவுடன், பப்பாளிப்பழம், அத்திப்பழம் போன்றவற்றை தொடர்ச்சியாக உணவில் சேர்க்கவேண்டும்.

சர்க்கரைவள்ளி, சோளக்குருத்து, எள், பாதாம், கேழ்வரகு போன்ற உணவுகள் எரிச்சலையும், புண்ணையும் குணப்படுத்தி வேதனையை குறைக்கவல்லவை.
 
மூலநோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பொருட்கள் 

மூலநோய் உள்ளவர்கள் அதிகமான எளிய சர்க்கரையுடன் பளபளப்பூட்டப்பட்ட மாவுச்சத்து நிறைந்த பொருட்களான மைதா, சோளமாவு போன்றவற்றையும் அவற்றில் செய்த உணவுப்பொருட்களையும் தவிர்க்கவேண்டும். சோடா மாவு மற்றும் ஈஸ்ட் சேர்த்து செய்யப்பட்ட பேக்கரி பொருட்களான பிரட், பிஸ்கட், கேக் வகைகளையும் பிற இனிப்பு வகைகளையும் தவிர்த்தால், பெருங்குடலில் உள்ள நன்மை செய்யும் நுண்கிருமிகள் காப்பாற்றப்படும். அதிக உப்பு சேர்த்த ஊறுகாய் வகைகள், வற்றல் மற்றும் இறைச்சி உணவுகளை உண்ணக்கூடாது. வினிகர், சோடியம் பென்சோயேட், அஜினோ மோட்டோ, சிட்ரிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் சேர்த்து பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட வற்றல் வகைகள், சாஸ் மற்றும் ஊறுகாய்களை அறவே தவிர்க்கவேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும், மூலநோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டு பாதுகாப்பாக இருப்பவர்களுக்கு, மீண்டும் சீராய்ப்புகளை ஏற்படுத்தி, மலச்சிக்கலுடன் மூலநோயை ஏற்படுத்திவிடும். 

- ப. வண்டார்குழலி இராஜசேகர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

SCROLL FOR NEXT