"அமைச்சர்கள் நீக்கம்: பிரதமர், சோனியா இணைந்து எடுத்த முடிவு'
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இணைந்து எடுத்த முடிவின்படிதான் அமைச்சரவையிலிருந்து பவன்குமார் பன்சால் மற்றும் அஸ்வனி குமார் நீக்கப்பட்டனர் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இணைந்து எடுத்த முடிவின்படிதான் அமைச்சரவையிலிருந்து பவன்குமார் பன்சால் மற்றும் அஸ்வனி குமார் நீக்கப்பட்டனர் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
""சோனியா காந்தியின் வற்புறுத்தல் காரணமாகவே ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட அமைச்சர்கள் நீக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஊகங்கள் ஏற்புடையது அல்ல. இந்த முடிவை பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் இருவரும் இணைந்தே எடுத்தனர்'' என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜனார்தன் துவிவேதி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
முன்னதாக, சோனியா காந்தியின் முடிவினால்தான் அமைச்சர்கள் நீக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்த கருத்தை மேற்கோள் காட்டிப் பேசிய பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பிரதமரை விமர்சித்திருந்தார்.
Advertisement
Advertisement
"தனது அமைச்சரவை குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை பிரதமர் விட்டுக் கொடுத்துள்ளார். அதனால், சுய மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்து விட்டு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்' என்று அத்வானி தெரிவித்தார்.
ஊழல் முறைகேடு புகாரில் சிக்கியதால் ரயில்வே துறை அமைச்சராக இருந்த பவன்குமார் பன்சாலும், சிபிஐயின் நிலக்கரி ஊழல் தொடர்பான அறிக்கையை திருத்திய சர்ச்சையில் சட்டத்துறை அமைச்சர் அஸ்வனி குமாரும் தங்களது பதவியை கடந்த வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.