லோக்பால் பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் பெயர்களை வெளியிட வேண்டும்: தகவல் ஆணையம்
லோக்பால் பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் பெயர்களை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் கூறியுள்ளது.
லோக்பால் பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் பெயர்களை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் கூறியுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட லோக்பால் சட்டத்தின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு லோக்பால் அமைப்பும், மாநில அரசு ஊழியர்களுக்கான லோக் ஆயுதா அமைப்பும் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மீதான புகார்களை விசாரிக்கும் லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினராக இடம்பெற விருப்பம் உள்ளவர்களிடமிருந்து மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை விண்ணப்பங்களை வரவேற்றது.
Advertisement
இதைத்தொடர்ந்து இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் பெயர்களை கேட்டு தகவல் உரிமை ஆர்வலர் சுபாஷ் அகர்வால் மனு அனுப்பியிருந்தார். அந்த மனுவை மத்திய பணியாளர் நலன் துறை நிராகரித்தது.
இதையடுத்து சுபாஷ், மத்திய தகவல் ஆணையத்தில் முறையிட்டார். இதை இன்று விசாரித்த மத்திய தகவல் ஆணையர் சுதீர் பார்கவா, லோக்பால் பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்களின் பெயர்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றார்.
இவ்விசாணையின் போது, லோக்பால் பதவிகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பெயர்களை வெளியிட்டால், அது அவர்களின் தனியுரிமையை பாதிக்கும் என மத்திய அரசு வாதிட்டது.
இதற்கு பதிலளித்த ஆணையர் சுதீர், சட்ட ஆர்வலர் லோக்பால் பதவிகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பெயர்களை மட்டுமே கேட்கிறார். அவர்களது தனிப்பட்ட விவரங்களை கேட்கவில்லை.
மத்திய அரசு விண்ணப்பித்தவர்கள் பெயர்களை வெளியிட்டால், அவர்கள் விண்ணப்பத்துடன் இணைக்காத பல்வேறு தகவல்களை பொதுமக்கள் வெளிக் கொண்டுவருவார்கள். மேலும், இது லோக்பால் பதவிகளுக்கான நியமனத்தில் வெளிப்படைதன்மையை அதிகரிக்கும். எனவே, அவர்களது பெயர்களை வெளியிட வேண்டும் என்றார்.