ஜேட்லி பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்துவது திசைதிருப்பும் நடவடிக்கை: பாஜக
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தி வருவது, தங்கள் மீதான ஊழல்களிலிருந்து திசை திருப்புவதாகும் என ஆளும் பாரதீய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
தில்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தி வருவது, தங்கள் மீதான ஊழல்களிலிருந்து திசை திருப்புவதாகும் என ஆளும் பாரதீய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த 1999 முதல் 2013 வரை தில்லி கிரிக்கெட் சங்கத்தில் அருண் ஜேட்லி தலைவராக இருந்த போது பெரிய அளவில் நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாயின.
பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தை புனரமைத்ததில் திட்ட மதிப்பீடு ரூ. 24 கோடியிலிருந்து ரூ. 114 கோடியாக உயர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது.
Advertisement
இதற்கு பதிலளித்துள்ள பாஜக செயலர் ஸ்ரீகாந்த் சர்மா, காங்கிரஸ் கட்சி தன் மீதான நேஷனல் ஹெரால்டு, 2ஜி உள்ளிட்ட ஊழல் குற்றசாட்டுகளை திசை திருப்புவதற்காக, அருண் ஜேட்லி மீது புகார் கூறுகிறது என்றார்.
மேலும், காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் போது தில்லி நேரு மைதானத்தின் சீரமைப்பு செலவு ரூ. 100 கோடியிலிருந்து 900 கோடியாக உயர்ந்ததை சுட்டி காட்டிய அவர், நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் காங்கிரஸ் கட்சி மீது எவ்வித புதிய வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஏற்கெனவே அவர்கள் ஆட்சி காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையிலேயே சி.பி.ஐ. தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்காக சிபிஐ தற்போது சுதந்திரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் சர்மா.
மேலும், மத்திய அரசு பழிவாங்கும் வகையிலே தன் மகன் அலுவலகத்தில் சோதனை நடத்துகிறது என கூறியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு பதில் அளித்துள்ள சர்மா, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாஜக பதவியேற்ற பின்பு எவ்வித புதிய வழக்கையும் பதிவு செய்யவில்லை என்றார்.