தெலங்கானாவின் கரீம்நகர் பகுதியில் 28 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் கூர்மையான வாளால் 22 பேரை கண்மூடித்தனமாக தாக்கியதைத் தொடர்ந்து காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தாக்குதல் நடத்திய இளைஞரின் பெற்றோரும் ஒரு ஆட்டோ ஓட்டுநரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு காவலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பலரும் வாளால் தாக்கப்பட்டதில் ரத்த காயங்களுக்கு சிகிச்சை பெறுகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து கரீம்நகர் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ராமா ராவ் கூறுகையில், லஷ்மி நகரைச் சேர்ந்த பல்விந்தர் சிங் (28) இன்று காலை 7 மணியளவில் தனது பெற்றோருடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தில், வீட்டில் இருந்த வாளை எடுத்து பெற்றோரை தாக்கியுள்ளார்.
அவர்கள் ரத்த வெள்ளத்தில் கீழே விழ, ஆத்திரம் அடங்காத பல்வீர் சிங், வீட்டை விட்டு வெளியேறி, ஒரு ஆட்டோ ஓட்டுநர் உட்பட கண்ணில் கண்டவர்களை எல்லாம் வாளால் தாக்கியுள்ளார்.
இது குறித்து அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினரையும் கடுமையாக தாக்கியுள்ளான். இதில் 3 தலைமைக் காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.
வேறு வழியின்றி, காவல்துறையினர் பல்விந்தர் சிங் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிக் குண்டு காயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முதற்கட்ட விசாரணையில் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பல்விந்தர் சிங் பணியாற்றி வந்தார் என்பதுதெரிய வந்துள்ளது. மேலும் தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.