தில்லி கிரிக்கெட் சங்க ஊழல்: கோபால் சுப்பிரமணியம் தலைமையில் விசாரணை ஆணையம்
தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகள் குறித்து கோபால் சுப்பிரமணியம் தலைமையில் ஆணையத்தை அமைத்து தில்லி ஆம் ஆத்மி அரசு இன்று உத்தரவிட்டது.
தில்லி கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு முன்னாள் தலைமை சட்ட ஆலோசகர் கோபால் சுப்பிரமணியம் தலைமையில் ஆணையத்தை அமைத்து தில்லி ஆம் ஆத்மி அரசு இன்று உத்தரவிட்டது.
எனினும், அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு விசாரணை ஆணையம் அமைப்பதற்கு துணை நிலை ஆளுநரின் அனுமதியை பெறவில்லை.
முன்னதாக நேற்று நடைபெற்ற சிறப்பு பேரவைக் கூட்டத்தில், தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Advertisement
இதன்படி தில்லி லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, தில்லி கிரிக்கெட் சங்கத்தில் ஜனவரி 1, 1992 முதல் நவம்பர் 30, 2015 வரை நடைபெற்ற முறைகேடுகள் (acts of omission and commission) குறித்து கோபால் சுப்பிரமணியம் தலைமையிலான ஒரு நபர் குழு விசாரணை செய்து மூன்று மாதத்துக்குள் அறிக்கை சமர்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்காக கோபால் சுப்பிரமணியத்துக்கு ரூ. 1 ஊதியமாக வழங்கப்படுகிறது.
இதனிடையே ஒருநபர் விசாரணை ஆணையம் அமைப்பது தொடர்பாக தில்லி துணைநிலை ஆளுநருக்கு அரசு சார்பில் எவ்வித கடிதமும் அனுப்பப்படவில்லை என தெரிகிறது.