"நெட்' தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம்: சிக்கலில் விண்ணப்பதாரர்கள்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கும் (சிபிஎஸ்இ), பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் (யுஜிசி) இடையே ஏற்பட்டுள்ள
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கும் (சிபிஎஸ்இ), பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் (யுஜிசி) இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக "நெட்' 2014 டிசம்பர் மாதத் தேர்வு முடிவை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
இந்தத் தாமதம் காரணமாக 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத் தேர்வு எழுதியவர்கள் முடிவுகள் தெரியாத காரணத்தால், ஜூன் மாதம் நடைபெற உள்ள தேர்வுக்கு விண்ணப்பிப்பதா அல்லது வேண்டாமா என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் கூறுகின்றனர்.
பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பதவிக்கு தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் ஒவ்வோர் ஆண்டும் ஜூன், டிசம்பர் மாதங்களில் தேசிய அளவிலான தகுதித் தேர்வு "நெட்' நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வை யுஜிசி நடத்தி வந்தது. கடந்த 2014 டிசம்பர் மாதம் முதல் இந்தத் தேர்வை நடத்தும் பொறுப்பை சிபிஎஸ்இ வசம் யுஜிசி ஒப்படைத்தது.
அதன்படி, டிசம்பர் மாதத் தேர்வை சிபிஎஸ்இ நடத்தியது. ஆனால், தேர்வு முடிவை இதுவரை வெளியிடவில்லை.
இதற்கிடையே, 2015 ஜூன் மாத "நெட்' தேர்வுக்கான அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டது.
ஜூன் 28-இல் நடைபெற உள்ள இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15 கடைசித் தேதியாகும்.
2015 ஜூன் மாத "நெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 5 நாள்களே உள்ள நிலையில், இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதா அல்லது வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாக முந்தைய தேர்வர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
"நாடு முழுவதும் பல லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். கடந்த ஆண்டு வரை ரூ. 500-ஆக இருந்த தேர்வுக் கட்டணம், இம்முறை ரூ. 600-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேர்வு முடிவுகள் இதுவரை வெளியிடாததால், தேர்ச்சி பெறும் வாய்ப்பு உள்ளவர்களும் தேவையின்றி விண்ணப்பிக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விண்ணப்பித்தவர்கள், ஏற்கெனவே எழுதிய தேர்வில் வெற்றி பெற்றால், தற்போது செலுத்திய தேர்வுக் கட்டணம் மீண்டும் கிடைக்கப்போவதில்லை என்றார் சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த "நெட்' தேர்வர் ரமேஷ்.
யுஜிசி, சிபிஎஸ்இ இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடே தேர்வு முடிவுகள் வெளியிடாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
டிசம்பர் மாதத் தேர்வை நடத்திய சிபிஎஸ்இ, தேர்வு முடிவுகளை வெளியிடும் பணியை யுஜிசி வசமே மீண்டும் ஒப்படைத்தது.
இதை ஏற்க மறுத்த யுஜிசி அதிகாரிகள், தேர்வு முடிவுகள் வெளியிடும் பணியையும், அடுத்து வரும் "நெட்' தேர்வுகளை நடத்தும் பொறுப்பையும் சிபிஎஸ்இ தான் எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறிவிட்டனர். இதுவே இழுபறிக்குக் காரணம் என யுஜிசி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து யுஜிசி துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் தொலைபேசி மூலம் கூறியது:
2014 டிசம்பர் மாத "நெட்' தேர்வு முடிவு வெளியிடுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. சிபிஎஸ்இ தான் முடிவுகளை வெளியிட வேண்டும்.
அடுத்து வரும் தேர்வுகளையும் அவர்கள்தான் நடத்த வேண்டும்.
இதுதொடர்பான அறிவுறுத்தல் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வருகிற புதன்கிழமைக்குள் (மே 13) இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.