அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது புதிய திட்டங்கள் மற்றும் சாதனங்கள் மூலம் இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் என அறிவித்துள்ளது.
இந்தியாவின், ஜஸ்ட் டயல், பேடிஎம், ஸ்நாப்டீல் ஆகிய நிறுவனங்களுடன் மைக்ரோசாப் புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவின் ஒவ்வொரு குடிமகன், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் முன்னேற்றத்துக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் துணை நிற்கும் என அதன் புதிய தலைவரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்திய நாதல்ல கூறினார்.
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வியாழக்கிழமை பங்கேற்ற அவர் இவ்வாறு கூறினார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மைக்ரோசாப்ட் கிளவுட், சர்பேஸ் புரோ 4 ஆகியவற்றை பயன்படுத்தும் இந்தியர்கள் புதிய வளர்ச்சியையும் உலக அளவிலான தரத்தையும் பெறுவார் என்றார் நாதல்ல.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பாஸ்கர் ப்ராமனிக், கிளவுட் மற்றும் மொபைல் தொழில்நுட்பங்கள் இந்தியாவில் ஏற்கெனவே புதிய மலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதிபுத்திசாலிகளான இந்தியர்களின் கைகளில் அளிக்கப்படும் தொழில்நுட்பங்கள் பல மாயமந்திரங்களை உருவாக்கும் என்றார் பாஸ்கர்.
மேலும், மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் ரூ. 80 லட்சம் செலவில் நிர்மாணித்துள்ள அசுர் தொழில்நுட்ப வசதியை கொண்டு புதிதாக அமைக்கப்பட்டும் 50 ஸ்மார்ட் நகரங்கள் நவீன தொழில்நுட்ப வசதியை பெறும். புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை பெற விண்ணப்பிக்கலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.