புத்த மதத்துக்கு மாறிய ரோஹித் வேமூலாவின் தாய், சகோதரர்
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட ரோஹித் வேமூலாவின் தாய் மற்றும் சகோதரர் இன்று புத்த மதத்த்தை தழுவினர்.
மும்பை: ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட ரோஹித் வேமூலாவின் தாய் மற்றும் சகோதரர் இன்று புத்த மதத்த்தை தழுவினர்.
மும்பை தாதரில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் முன்னிலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புத்த துறவிகள் அவர்களுக்கு தீட்ச்சை வழங்கினர்.
ஹைதாராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகப் பயின்று வந்த ரோஹித் வேமூலா உள்ளிட்ட மாணவர்களைப் பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. இதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது, பல்கலைக்கழக வளாகத்திலேயே வேமூலா தற்கொலை செய்து கொண்டார்.
Advertisement
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தலித் என்ற இனபாகுபாடு காரணமாகவே ரோஹித் வேமூலா தற்கொலை செய்து கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில் இந்திய அரசியல்சாசனத்தை வரைவு செய்த அம்பேத்கரின் பிறந்தநாள் விழா மும்பையில் இன்று கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் முன்னிலையில் ரோஹித் வேமூலாவின் தாயார் ராதிகா மற்றும் சகோதரர் நாகசைதன்ய வேமூலா ஆகியோர் புத்த மதத்தை தழுவினர்.
இந்து மதத்தில் நிலவி வரும் ஜாதி பாகுபாடுகளால் நாகபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த 1956 ஆம் ஆண்டு அம்பேத்கர் புத்த மதத்தை தழுவினார். அதேபோல வேமூலாவின் தாயும், சகோதரரும் புத்த மதத்துக்கு மாறியுள்ளனர்.
புத்த மதத்துக்கு மாறியது குறித்து வேமூலாவின் சகோதரர் கூறியதாவது:
எனது சகோதரர் ரோஹித் வேமூலா புத்த மதத்துக்கு மாறவிட்டாலும், புத்தரின் போதனைகளைக் கடைப்பிடித்து வந்தார். தலித் என்ற இனபாகுபாடு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டதாலே அவர் தற்கொலை செய்து கொண்டார். ரோஹித்தின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது இறுதிச் சடங்குகள் அனைத்தும் புத்த மதத்தின்படியே நடைபெற்றன.
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் நிலவி வந்த தலித் இனப்பாகுபாடு குறித்து துணைவேந்தருக்கு வேமூலா கடிதம் எழுதியிருந்தார்.
இந்து மதத்தில் நிலவும் ஜாதிப் பாகுபாடுகளை எதிர்க்கும் வகையிலேயே புத்த மதத்தை தழுவியுள்ளோம் என்றார்.
ரோஹித்தின் தாயும், சகோதரரும் புத்த மதத்துக்கு மாறியுள்ள நிலையில், திருமணமான அவரது மூத்த சகோதரி புத்த மதத்துக்கு மாறவில்லை.