கொச்சி: கேரள மாநிலம் கக்கநாட் - எர்ணாகுளம் செல்லும் வழியில் தனியார் பேருந்தில் ஏறியவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கும்... இனிய குரலில் இளம் பெண் ஒருவர் சில்லறை அடங்கிய பையைக் குலுக்கியவாறு 'டிக்கெட் டிக்கெட்' என்று சொல்வதுதான்.
விண்வெளி முதல் ஆட்டோ ஓட்டுவது வரை அனைத்துத் துறையிலும் பெண்கள் தங்களது திறமையை நிரூபித்துவிட்டார்கள். இந்த நிலையில், கொச்சி தனியார் பேருந்து சேவை நிறுவனத்தில், பெண் ஒருவர் நடத்துநர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
துத்தியூரைச் சேர்ந்த 23 வயது பெண் எம்.கே. லினி, கொச்சின் என்ற தனியார் பேருந்து சேவை நிறுவனத்தில் நடத்துநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது பணியை நேற்று துவக்கினார். அவரிடம் இருந்து எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் எம்.ஜி. ராஜமாணிக்கம் முதல் டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டார்.
பேருந்துகளில் நடத்துநர் பணியை பெண்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய ஆட்சியர் ராஜமாணிக்கம், பேருந்து நடத்துநர் பணிக்கு 24 பெண்கள் பயிற்சி எடுத்து இன்று முதல் தங்களது பணியை துவக்குகின்றனர். இது வரவேற்பைப் பெற்றால், ஏராளமான குடும்பப் பெண்கள் இப்பணியில் நியமிக்கப்படுவார்கள். இதன் மூலம் தனியார் பேருந்துகளில் நடத்துநர்களுக்கான பற்றாக்குறையும் தீரும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.