மோடிக்கு பாராட்டு; வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகள்: முகேஷ் அம்பானியின் 'அடடே' பிளான் !
பணமதிப்பு நீக்க விவகாரம் பிரதமர் மோடி எடுத்துள்ள முக்கியமான நடவடிக்கை என்று புகழ்ந்துள்ள ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளையும் அறிவித்துள்ளார்.
மும்பை: பணமதிப்பு நீக்க விவகாரம் பிரதமர் மோடி எடுத்துள்ள முக்கியமான நடவடிக்கை என்று புகழ்ந்துள்ள ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அம்பானி, வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளையும் அறிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவன பங்குதாரர்களிடையே மும்பை அலுவலகத்தில் முகேஷ் அம்பானி இன்று உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
வரும் டிசம்பர் 4-ஆம் தேதி துவங்கி, புதிதாக ரிலையன்சின் ஜியோ நெட்வொர்க்கில் இணையும் அனைவருக்கும் அழைப்புகள், டேட்டா மற்றும் வீடியோ என அனைத்து சேவைகளும், மார்ச் 31, 2017 வரை இலவசமாக வழங்கப்படும்.
'ஜியோ ஹாப்பி நியூ இயர் ஆபர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சலுகையானது தற்போது ஜியோ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் விரிவு படுத்தப்படும்.
பண மதிப்பு நீக்க விவகாரத்தைப்பொறுத்த வரை இது பிரதமர் மோடி எடுத்துள்ள மிக முக்கியமான நடவடிக்கையாகும். இது இந்தியர்களின் மனநிலையை மாற்றி அவர்களை, டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை நோக்கி செலுத்தும். இதன் காரணமாக நேர்மையான, வலிமையான இந்தியாவையும், பொருளாதாரத்தையும் உண்டாக்க உதவும்.
மேலும் இது முன்னெப்போதும் இல்லாத வகையில் எல்லா மட்டத்திலும் நம்பகத்தன்மையை உருவாக்கும்.
இவ்வாறு அவர் தனது பேச்சில் தெரிவித்தார்.