பழைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்த பிறகு, மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் உள்ள தனியார் வங்கியில் 47 வங்கிக் கணக்குகளில் கள்ள ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்த நபர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
நாசிக்கில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில், 25 பழைய ரூ.1,000 நோட்டுகளும், 21 பழைய ரூ.500 நோட்டுகளும் கள்ள நோட்டுகளும் இருந்ததை வங்கி அதிகாரிகள் கண்டறிந்தனர். கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 47 வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்ட இந்த கள்ள நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.35,600 ஆகும். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இந்த வங்கிக் கணக்குகளில் மர்ம நபர் ஒருவர் கள்ள நோட்டுகளை செலுத்தியதாக, காவல்துறையிடம் புகார் அளித்தனர். அதையடுத்து, இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு இத்தனை நபர்கள் எப்படி ஒப்புக் கொண்டனர்? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.