கடுமையான பனிப்பொழிவு காரணமாக சியாச்சின் மலைப்பகுதியில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 9 ராணுவ வீரர்கள் உடலை கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத்தில் பயிற்சி அளிக்கப்படும் ராணுவ வீரர்கள் பல்வேறு இடங்களில் பணிக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத்தில் பயிற்சி பெறும் வீரர்கள் சியாச்சினில் 1988-இல் இருந்து பணியாற்றி வருகின்றனர். இந்த மையத்தைச் சேர்ந்த 19-ஆவது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் சியாச்சினில் கடந்த அக்டோபர் முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சியாச்சின் கடல் மட்டத்தில் இருந்து 19,600 அடி உயரத்தில் உள்ளது. இங்கு, 200-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி பாதுகாப்புப் பணியில் இருந்தபோது மெட்ராஸ் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த 10 வீரர்கள் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.
ஆறு நாள்களுக்குப் பிறகு, கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா கொப்பாட் உயிருடன் மீட்கப்பட்டு தில்லி மருத்துவமனையில் இறந்தார்.
இந்நிலையில் மீட்கப்பட்ட மற்ற ஒன்பது ராணுவ வீரர்களின் உடல்கள் இன்னும் சியாச்சின் மலைப் பகுதியிலேயே உள்ளது.
``ஹனுமந்தப்பா மீட்கப்பட்ட நாளிலிருந்து அங்கு கடும் பனிப்பொழி உள்ளது. ஒரு மணி நேரம் கிடைத்தால் கூட நாங்கள் அங்கிருந்து வீரர்கள் உடலை கொண்டு வந்துவிடுவோம். வீரர்கள் உடலை கொண்டுவருவதற்காக இன்று அனுப்பப்பட்ட ஹெலிகாப்டர்களும் மோசமான வானிலை காரணமாக திரும்பிவந்துவிட்டன'' என ராணுவ அதிகாரி டி.எஸ்.ஹூடா கூறினார்.
இதுகுறித்து இறந்த வீரர்களின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்களை தில்லியிலிருந்து ராணுவ வீரர்களின் சொந்த ஊருக்கு எடுத்து செல்வதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் ஹூடா கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.