நெல்லையில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: 52 அரசு பள்ளிகள் மூடல்
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக செவ்வாய்க்கிழமை 52 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மூடப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக செவ்வாய்க்கிழமை 52 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மூடப்பட்டன.
தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி கூட்டணியின் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் ராஜ்குமார், செயலர் செ. பால்ராஜ் ஆகியோர் கூறியது: மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆரம்பப் பள்ளிகளை மூடும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி கூட்டணி திங்கள்கிழமை முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் 2 ஆவது நாளான செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் பணிக்கு செல்லாததால் இயங்கவில்லை.
மேலப்பாளையம் பகுதியில் 14 பள்ளிகள், பாளையங்கோட்டை பகுதியில் 8 பள்ளிகள், தென்காசி சரகத்தில் 14 பள்ளிகள், பாப்பாக்குடி சரகத்தில் 6 பள்ளிகள், சேரன்மகாதேவி சரகத்தில் 2 பள்ளிகள், மானூர் சரகத்தில் 3 பள்ளிகள், சங்கரன்கோவில் சரகத்தில் 5 பள்ளிகள் உள்பட மொத்தம் 52 பள்ளிகள் மூடப்பட்டன.
வேலைநிறுத்தத்தில் 750 ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். திருநெல்வேலி, தென்காசி, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவிலில் அரசு ஊழியர்களுடன் இணைந்து நடத்திய மறியல் போராட்டத்தில் 436 பேர் கைதாகியுள்ளனர் என்றார் அவர்.
பள்ளிகள் மூடப்பட்டதால், வரும் ஏப்ரல் மாதம் இறுதித் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக மாணவர், மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.