கொச்சியில் சம்பவம்: ஆம்புலன்ஸ் வாகனம் வெடித்துச் சிதறி 2 பேர் பலி
கொச்சியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட 72 வயது நபரை ஏற்றிக் கொண்டு வயநாடு பகுதியில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் மீன்குன்னம் பகுதியில் எதிர்பாராத வகையில் வெடித்துச் சிதறியதில் நோயாளியும், அவரது மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொச்சி: கொச்சியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட 72 வயது நபரை ஏற்றிக் கொண்டு வயநாடு பகுதியில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் மீன்குன்னம் பகுதியில் எதிர்பாராத வகையில் வெடித்துச் சிதறியதில் நோயாளியும், அவரது மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆம்புலன்ஸ் வெடித்ததில் விஜே ஜேம்ஸ் மற்றும் அவரது மகள் அம்பிலி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்களுடன் ஆம்புலன்ஸில் வந்த செவிலியர் லஷ்மி, ஜேம்ஸின் உறவினர் காயத்துடன் உயிர் தப்பினர். ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் செவிலியர் மெல்வின் ஆன்டணியும் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
இவர்கள் 6 பேரும் கோட்டயத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் சென்று கொண்டிருந்தபோது, ஆம்புலன்ஸில் பொருத்தப்பட்டிருந்த உயிர்காக்கும் கருவியில் இருந்து தீப்பொறி பரவியது. ஒரு சில நொடிகளில் அந்த தீப்பொறி ஆம்புலன்ஸ் முழுக்க பரவி, ஆம்புலன்ஸ் வாகனம் வெடித்துச் சிதறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Advertisement
வாகன ஓட்டுநரும் செவிலியரும் தீயைப் பார்த்ததும் ஆம்புலன்ஸில் இருந்து குதித்ததால் உயிர் தப்பினர். மேலும் ஆம்புலன்சில் இருந்த இரண்டு பேரை வெளியே மீட்பதற்குள், ஆம்புலன்ஸ் முழுவதும் தீ பரவி ஜேம்ஸும், அம்பிலியும் வாகனத்துக்குள்ளேயே தீயில் கருகினர்.
இதில் படுகாயம் அடைந்த செவிலியர் லஷ்மி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் ஆம்புலன்ஸ் வாகனம் முழுவதும் தீக்கிரையானது.