கணினி 'புரோகிராம்' எழுத தெரியாத 25 இந்திய மாணவர்கள் வெளியேற்றம்
அமெரிக்காவின் கென்டக்கி பல்கலைக்கழகத்தில் கணினி பிரிவில் பயிலும் இந்திய மாணவர்கள் 25 பேருக்கு பாடம் குறித்த போதிய அறிவு இல்லாததால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நியூ யார்க்: அமெரிக்காவின் கென்டக்கி பல்கலைக்கழகத்தில் கணினி பிரிவில் பயிலும் இந்திய மாணவர்கள் 25 பேருக்கு பாடம் குறித்த போதிய அறிவு இல்லாததால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தனியார் நிறுவனங்கள் மூலம் கென்டக்கி பல்கலைக்கழகத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இப்பல்கலைக்கழகத்தில் கணினி பிரிவில் சேர்ந்த 60 இந்திய மாணவர்களில், 40 பேருக்கு பாடம் குறித்து போதிய அறிவு இல்லை என அத்துறையின் தலைவர் ஜேம்ஸ் கேரி கூறினார். அவர்களுக்கு தேவையான கூடுதல் பயிற்சிகள் அளிக்கப்பட்ட பின்னரும், அவர்களில் 25 பேருக்கு கணினி குறித்த 'புரோகிராம்' எழுதவே தெரியவில்லை.
Advertisement
எனவே, அவர்கள் 25 பேரையும் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றுவது என நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த மாணவர்களை தொடர்ந்து படிப்பதற்கு அனுமதிப்பது என்பது தெரிந்தே பணத்தை விரயம் செய்வது போன்றதாகும் என கணினி துறை தலைவர் ஜேம்ஸ் கேரி கூறினார்.
`இது மிகவும் துரதிர்ஷ்டமானது' என இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் பிரிவுத் தலைவர் ஆதித்யா சர்மா கூறினார். நிறைய பணம் செலவழித்து அமெரிக்காவுக்கு படிக்க வரும் இந்திய மாணவர்களில் சிலர் படிப்பை 'வெகு எளிதாக' எடுத்துக் கொள்கின்றனர் என்றார் சர்மா.
வெளியேற்றப்பட்ட மாணவர்களில் சிலர் வேறு படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ளனர். அப்படி இடம் கிடைக்காதபட்சத்தில் அவர்கள் இந்தியாவுக்கு திரும்ப வேண்டியிருக்கும்.
இதனிடையே கென்டக்கி பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கைத் தொடர்பாக புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவிலிருந்து கணினி பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்களை, பல்கலைக்கழக ஆசிரியர்கள் நேரில் சந்தித்து அவர்களது திறமையை சோதித்தப் பின்னரே பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது.