முகப்பு
இந்தியா

ஹெலிகாப்டர் பேர ஊழல்: விமானப் படை முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகியிடம் விசாரணை

ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரம் தொடர்பாக இந்திய விமானப் படையின் முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியிடம் மத்தியப் புலனாய்வு அமைப்பு இன்று விசாரணை நடந்து வருகிறது.

Updated On : 2 மே, 2016 at 11:37 AM
பகிர்:

புது தில்லி : ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரம் தொடர்பாக இந்திய விமானப் படையின் முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியிடம் மத்தியப் புலனாய்வு அமைப்பு இன்று விசாரணை நடந்து வருகிறது.

மத்தியப் புலனாய்வு அலுவலகத்தில் விசாரணைக் குழு முன்பு இன்று காலை தியாகி ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய விமானப் படையின் முன்னாள் துணைத் தளபதி ஜே.எஸ்.குஜ்ராலிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை விசாரணை நடத்திய நிலையில், இன்று எஸ்.பி. தியாகியிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement

அதிமுக்கியப் பிரமுகர்களுக்காக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ஹெலிகாப்டர்களை வாங்க இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ரூ.360 கோடி லஞ்சமாக கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விமானப் படையின் முன்னாள் தலைமைத் தளபதி தியாகி உள்பட 13 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் விசாரணை நடத்துவதற்காக விமானப் படையின் முன்னாள் துணைத் தளபதி ஜே.எஸ்.குஜ்ரால் சனிக்கிழமையும், முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகி திங்கள்கிழமையும் (மே.2) நேரில் ஆஜராகும்படி சிபிஐ அழைப்பாணை அனுப்பியது.

அதன்படி, தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் சனிக்கிழமை குஜ்ரால் விசாரணைக் குழு முன்பு ஆஜரானார்.

 "குஜ்ராலிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு மீண்டும் அழைக்கும்போது ஆஜராகுமாறு அவரிடம் தெரிவிக்கப்பட்டது' என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

 குற்றச்சாட்டு தொடர்பாக தியாகியிடமும், குஜ்ராலிடமும் கடந்த 2013-ஆம் ஆண்டு விசாரணை நடத்தப்பட்டபோதிலும், இத்தாலி நீதிமன்றம் சமீபத்தில் வெளியிட்ட ஆணையின்படி அவர்களிடம் மீண்டும் விசாரணை மேற்கொள்வது அவசியம் என சிபிஐ கருதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.