கேரளாவில் இளம் பெண் பலாத்காரம் செய்து கொலை: சந்தேகக் குற்றவாளியின் வரைபடம் வெளியீடு
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் தலித் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரின் வரைபடத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது.
திருவனந்தபுரம் : கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் தலித் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரின் வரைபடத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்து காவலில் வைத்துள்ள விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவம் நடந்த ஏப்ரல் 28ம் தேதி, அப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்ததாகக் கூறிய நபரின் வரைபடத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையே, காவல்துறை வெளியிட்டுள்ள வரைபடத்தில் இருப்பவரும், கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவரின் முகமும் ஒன்று போல இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை உறுதி செய்ய காவல்துறை மறுத்துவிட்டது.
Advertisement
பெரம்பாவூர் நகரைச் சேர்ந்த அந்த இளம் பெண், எர்ணாகுளத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்து வந்தார். மிக ஏழ்மையான குடும்பப் பின்னணியைக் கொண்ட அவர், தனது வீட்டில் கடந்த 28-ஆம் தேதி தனியாக இருந்தபோது, மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கூர்மையான ஆயுதங்களால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அளித்த தகவலின்படி, இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (மே 3) வெளி உலகத்துக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதனிடையே, இந்தச் சம்பவம் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, அந்த மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள் ஆகியோர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஊடகச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, கேரள மாநில பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் நல ஆணையமும், மாநில மனித உரிமைகள் ஆணையமும் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டன.
இதுகுறித்து பழங்குடியின ஆணையத் தலைவரும், நீதிபதியுமான பி.என்.விஜயகுமார், திருவனந்தபுரத்தில், பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், "சட்ட மாணவி கொலை தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, மே 28-ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேரள காவல் துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.