சினிமா சூட்டிங்கில் விபரிதம்: ஹெலிகாப்டரில் இருந்து எரியில் குதித்த 2 நடிகர்கள் மரணம்?
கன்னட திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பின் போது, ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதித்த 2 கன்னட நடிகர்கள் ஏரியில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பெங்களூரு; கன்னட திரைப்பட ஒன்றின் படப்பிடிப்பின் போது, ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதித்த 2 கன்னட நடிகர்கள் ஏரியில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கன்னட நடிகர் துனியா விஜய் கதாநாயகனாக நடிக்கும் படம் மஸ்தி குடி. இந்த படத்திகதாநாயகன் துனியா விஜய் ஹெலிகாப்டரில் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியன்றை பெங்களூரு அருகே உள்ள திப்பகொண்டனஹள்ளி ஏரியில் இன்று படமாக்க திட்டமிடப்பட்டது,
இதற்காக மாலை 2 மணிக்கு ஏரி அருகே ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. துனியா விஜய் மற்றும் வில்லன் நடிகர்கள் உதய், அனில் ஆகியோர் அந்த ஹெலிகாப்டரில் ஏறினார்கள். ஹெலிகாப்டர் ஏரியின் நடுவே உயரத்தில் பறக்க கேமராவில் சண்டை காட்சி படமானது.
மூன்று பேரும் ஆக்ரோஷமாக சண்டையிடுவது போன்று முதலிலும், அதன் பின்னர் அவர்கள் மூவரும் ஒருவர் பின் ஒருவராக ஏரியில் குதிப்பது போன்றும் அந்த காட்சி படமாக்கப்பட்டது. 100 அடி உயரத்தில் இருந்து அவர்கள் மூவரும் ஏரி நீரில் குதித்தார்கள். அவர்களில் விஜய் மட்டும் நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தார். உதய், அனில் இருவரும் நீண்ட நேரமாகியும் கரைக்கு வரவில்லை. அவர்கள் இருவரும் நீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
உடனடியாக அங்கு மீட்பு பணிகள் தொடங்கியது. நீருக்குள் மூழ்கி மீட்பு பணியில் ஈடுபடும் வீரர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனிடையே போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எதுவுமில்லாமல் இந்த படப்பிடிப்பு நடந்ததாக தற்போது தெரிய வந்திருக்கிறது.