இந்தியா

சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு

DIN

செளமியா பாலியல் பலாத்கார வழக்கில், உச்ச நீதிமன்றம் தவறான தீர்ப்பை வழங்கியதற்கு, அங்கு குவிந்துள்ள நிலுவை வழக்குகளால் ஏற்பட்ட பணிச்சுமைகளே காரணம் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்தார்.
கேரள மாநிலத்தில் செளமியா (23) என்ற இளம்பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி கோவிந்தசாமிக்கு கேரள உயர்நீதிமன்றம் உறுதி செய்த மரண தண்டனையை, மேல்முறையீட்டின்போது உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை விமர்சித்து மார்க்கண்டேய கட்ஜு கடந்த மாதம் கருத்து தெரிவித்திருந்தார். அதையடுத்து, அவரை நவம்பர் மாதம் 11-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கட்ஜு முகநூல் பக்கத்தில் திங்கள்கிழமை கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்றம் எனக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் மிகவும் மதிப்பிற்குரிய வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்க என்னை ஆஜராகுமாறு உத்தரவிடவில்லை; வேண்டுகோள்தான் விடுக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய எனது உதவியை அவர்கள் (நீதிபதிகள்) நாடுகின்றனர் என்பதால் கண்டிப்பாக நேரில் ஆஜராகி எனது கருத்துகளை தெரிவிப்பேன். நீதிபதிகள் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள நிலுவை வழக்குகளால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. எனவே வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக சரியான தீர்ப்பை வழங்க நீதிபதிகளுக்கு கால அவகாசம் வழங்கப்படாததால் இதுபோன்ற தவறுகள் நடப்பது சகஜம். "தவறே செய்யாத நீதிபதி என்று யாரும் இதுவரை பிறந்திருக்கவில்லை' என்று பிரபல பிரிட்டிஷ் நீதிபதி லார்டு டென்னிங் கூறியுள்ளார். நானும் நீதிபதியாக இருந்தபோது சில சமயம் தவறான தீர்ப்புகளை அளித்துள்ளேன் என்று அந்தப் பதிவில் கட்ஜு குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT