ஹைதராபாத்: ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழக அதிகாரியின் 14 வீடுகளில் ஒரே ஒரு வீட்டில் மட்டும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ஏராளமான வெள்ளி, தங்க சாமான்களும், ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.
1981ம் ஆண்டு மோட்டார் வாகன ஆய்வாளராக தனது பணியைத் தொடங்கிய பூர்ணசந்திர ராவ் (55) தற்போது சாலைப் போக்குவரத்துக் கழக அதிகாரியாக உள்ளார்.
கடந்த 34 ஆண்டுகால அரசுப் பணியில் அவர் சுமார் 14 வீடுகளை வாங்கிக் குவித்துள்ளார். அவர் மீதான லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்த புகாரினை அடுத்து, அவரது ஒரே ஒரு வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அந்த வீட்டின் ஒரு அறையில் வெள்ளிச் சாமான்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. சுமார் 60 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்கள், 1 கிலோ தங்கம், ரூ.20 லட்சம் மதிப்புள்ள ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இது ஒரு ஆரம்பமே, இன்னும் பல வீடுகளில் சோதனை நடத்தினால் ஏராளமான பொருட்கள் கைப்பற்றப்படும் என்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சோதனை நடத்திய வீட்டின் மதிப்பே ரூ.25 கோடிக்கு மேல் என்றும், கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.3 கோடி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.