இருக்கை பிரச்சினையால் அரைமணி நேரம் தாமதமான ஏர் இந்தியா விமானம்: இது எம்.பிக்களின் 'சண்டை' சீசன்!
தனது தாயாரை இருக்கை மாற்றி அமரச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏர் இந்தியா விமானம் கிளம்புவதை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி ...
கொல்கத்தா: தனது தாயாரை இருக்கை மாற்றி அமரச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏர் இந்தியா விமானம் கிளம்புவதை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி ஒருவர், அரைமணி நேரம் தாமதமாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி டோலா சென். இவர் இன்று கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். அவருடன் அவரது தாயாரும் பயணம் செய்தார். அவரது தாயாருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையானது, விமானத்திற்கான அவசர காலத்தில் வெளியே செல்லும் வழியில் அமைந்திருந்தது.
இதனால் அவரது தாயாரை இருக்கை மாற்றிக் கொள்ளுமாறு விமான பணிப்பெண்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் இதற்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பியான டோலா சென் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இறுதியாக அவரது தாயார் இருக்கை மாற்றி அமர செய்யப்பட்டார். இதன் காரணமாக விமானம் கிளம்புவது அரைமணி நேரம் தாமதமானது. இது பயணிகளிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கியது
Advertisement
கடந்த மாதம் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி செல்ல புனே விமான நிலையத்துக்கு வந்தார். அவர் கையில் ‘பிசினஸ்’ வகுப்பு டிக்கெட் வைத்திருந்தார். ஆனால் அவர் பயணம் செய்வதற்கு ‘எகனாமி’ வகுப்பு இருக்கைகள் மட்டுமே வடிவமைக்கப்பட்ட விமானம் மட்டுமே இருந்தது. இதனால் அவர் எரிச்சலாகி டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இறங்கும் பொழுது விமான நிலைய ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார். சமாதானம் செய்ய முயன்ற ஏர் இந்தியா மேலாளர் சுகுமார் (வயது 60) என்பவரை கெய்க்வாட் கடுமையாக தாக்கி தனது காலணியால் அடித்தார் எனபது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இது தொடர் கதையாகி வருகிறது.