ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம்: கோடை விடுமுறைக்குப் பின் விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள கூடுதல் கால அவகாசம் வழங்கக் கோரும் மனுக்கள் கோடை விடுமுறைக்குப் பிறகு மீண்டும் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள கூடுதல் கால அவகாசம் வழங்கக் கோரும் மனுக்கள் கோடை விடுமுறைக்குப் பிறகு மீண்டும் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்தது. பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய டிசம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், இந்த கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பில் இருந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்த பதிலில், "டிசம்பர் 30-ஆம் தேதிக்குப் பிறகு பழைய ரூபாய்களை வங்கிகள் டெபாசிட்டாக பெறுவது இல்லை என்ற முடிவை உரிய காரணங்களுடன்தான் மத்திய அரசு எடுத்துள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின்போது வெளிநாடுகளில் இருந்தவர்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கியில் சிறப்பு கவுன்டடர்கள் திறக்கப்பட்டன' என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விஷயத்தில் மத்திய அரசு அளித்துள்ள விளக்கத்துக்குப் பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமென்று மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை கோடை விடுமுறைக்குப் பிறகு மேற்கொள்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.