மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்களித்ததை வாக்காளர்கள் உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டு (விவிபிஏடி) அச்சடிப்பதற்கான 16 லட்சம் கருவிகளை வாங்கவிருப்பதாக, அவற்றைத் தயாரிக்கவுள்ள பொதுத் துறை நிறுவனங்களிடம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பொதுத் துறை நிறுவனங்களான இசிஐஎல் மற்றும் பிஇஎல் ஆகியவற்றுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
வாக்களிப்பை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டை அச்சடிப்பதற்காக 16,15,000 அச்சு இயந்திரங்களை வாங்க மத்திய அரசு ஒப்பதல் அளித்துள்ளது.
இதற்கு ரூ.3,173.47 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 2017-18 மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளில் இந்த அச்சு இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையர் நஸீம் ஜைதி கூறுகையில், ""தேர்தல்களில் நம்பகத்தன்மையையும், வெளிப்படைத் தன்மையையும் அதிகரிக்கும் வகையில், வாக்காளர்கள் வாக்களித்தார்களா, இல்லையா, எந்தக் கட்சிக்கு வாக்களித்தார்கள் என்பது போன்ற விவரங்கள் அச்சிட்டுத் தரப்படும்'' என்றார் அவர்.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஒப்புகைச் சீட்டு அச்சிடும் இயந்திரத் தயாரிப்பை தாங்கள் உன்னிப்பாக கவனிக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.