திருப்பதி: சந்திர கிரகணம் ஏற்படுவதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை இரவு அனைத்து நடைகளும் அடைக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
நாளை திங்கள்கிழமை (ஆக. 7) இரவு தோன்றும் சந்திர கிரகணம் இரவு 10.20 மணிக்கு தோன்றும் கிரகணம் நள்ளிரவு 12.05 வரை ஏறத்தாழ 2 மணி நேரம் நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பூரண கிரகணம் அல்ல என்றும் சந்திரன் பகுதியளவே மறைந்து காட்சியளிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனை இந்தியா உள்பட அனைத்து ஆசிய நாடுகளிலும் காணலாம் என்று தெரிவித்த வானிலை ஆராய்ச்சியாளர்கள், ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் சந்திர கிரகணம் தோன்றும் என்றனர்.
அதேவேளையில், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் இந்த நிகழ்வு நடைபெறும் நேரமானது பகல் வேளையாக இருக்கும் என்பதால் அங்கு கிரகணத்தைக் பார்க்க முடியாது.
இந்தியாவைப் பொருத்தவரை, சந்திர கிரகணத்தைக் காண மும்பை, சென்னை, கொல்கத்தா, தில்லி உள்ளிட்ட நகரங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் சந்திர கிரகணம் ஒன்று தோன்றியது. ஆனால், அப்போது பூமியின் நிழலின் ஊடே நிலா கடந்து செல்லாமல் அதன் புற வெளியில் கடந்து போனது. இதனால், அந்த கிரகணத்தை காண இயலவில்லை.
இந்நிலையில், சந்திர கிரகணம் ஏற்படுவதை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாளை மாலை 4.30 மணி முதல் மறுநாள் (ஆக. 8) காலை 7 மணி வரை கோவிலில் உள்ள மகாதுவாரம் உள்பட அனைத்து நடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“நடைகள் மூடப்படும் நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாது. மேலும் லட்டு பிரசாதம், அன்னதான திட்டமும் தற்காலிகமாக நிறுத்தப்படும். இதையடுத்து 8 ஆம் தேதி காலை 5.30 மணி அளவில் நடை திறக்கப்படும். பக்தர்களின் தரிசனத்திற்கு முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
நடை திறக்கப்பட்ட பின்னர் பக்தர்கள் வழக்கம்போல கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம். மேலும் நாளை கருட சேவை உட்பட எந்த நிகழ்ச்சியும் நடைபெறாது” என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஸ்ரீனிவாச ராஜூ தெரிவித்தார்.