ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமியர் அல்லாதோருக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து: மத்திய அரசுக்கு கடைசி சந்தர்ப்பம்!
ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமியர் அல்லாதோருக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க கோரிய வழக்கில், மத்திய அரசுக்கு கடைசி சந்தர்ப்பம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுதில்லி: ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமியர் அல்லாதோருக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க கோரிய வழக்கில், மத்திய அரசுக்கு கடைசி சந்தர்ப்பம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்முவினை சேர்ந்த வழக்கறிஞரான அன்குர் ஷர்மா என்பவர் உச்சநீதி மன்றத்தில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில் ஜம்மு காஷ்மீர் போன்ற இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மாநிலமொன்றில், வசிக்கும் இதர மதத்தினவர்களுக்கு சிறுபாண்மை அந்தஸ்து வழங்க வேண்டும். இதன் காரணமாக அரசு வழங்கும் பல்வேறு உதவித்திட்டங்களை அவர்கள் பெற வசதியாக இருக்கும். இது தொடர்பாக தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு பலமுறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'இது தொடர்பாக மாநில அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் மத்திய அரசு பேச்சுவார்தை நடத்த வேண்டி உள்ளது. எனவே மேலும் எட்டு வாரங்கள் அவகாசம் வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.
Advertisement
இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி ஜே .எஸ்.கேஹர், நீதிபதிகள் கோயல் மற்றும் சந்திரசூட் அடங்கிய அமர்வானது, இறுதியாக மத்திய அரசுக்கு எட்டு வாரங்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.