திருப்பதிக்கு துப்பாக்கி, 14 தோட்டாக்களுடன் வந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் சுதாகர் கணபத் புதன்கிழமை காலை குடும்பத்தினருடன் காரில் வந்தார்.
அலிபிரி சோதனைச் சாவடியில் அவரது காரை அங்கிருந்த கண்காணிப்புத்துறை ஊழியர்கள் சோதனையிட்டனர். அப்போது, அந்த காரில் ஒரு துப்பாக்கி, 6 தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது. இதனைக் கண்ட கண்காணிப்புத் துறை ஊழியர்கள் துப்பாக்கியின் உரிமத்தை சுதாகரிடம் கேட்டனர். அவர் துப்பாக்கியின் உரிமத்தை காண்பித்தார்.
அதில், மகாராஷ்டிர மாநிலத்துக்குள் மட்டுமே துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும் என்பது, மற்ற மாநிலங்களில் அந்த துப்பாக்கியை பயன்படுத்த அனுமதி இல்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, கண்காணிப்புத்துறை ஊழியர்கள் துப்பாக்கி மற்றும் அதனுடன் இருந்த 6 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். பின்னர், ஆயுத தடைச் சட்டத்தின் கீழ், சுதாகரன் மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர்.
இதற்கிடையே, சுதாகரனின் மகன் தனது சட்டைப் பையில் வைத்திருந்த 8 தோட்டாக்களை அங்கிருந்த குப்பைத்தொட்டியில் போட்டார். அவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.