மற்றவர்களின் மதம், மொழி, நாடு மீது வெறுப்பை வளர்ப்பது தேசியவாதம் ஆகாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது சுதந்திர உரையில் கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய அரங்கில் செவ்வாய்க்கிழமை தேசியக் கொடியேற்றி வைத்து அவர் பேசியதாவது: நமது தேசியவாதம் என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. மதச்சார்பின்மையும், ஜனநாயக மாண்புகளும்தான் நமது தேசியத்தை காத்து நிற்கின்றன.
பிற மதத்தின் மீதும், மற்றவர்களின் மொழியின் மீதும், பிற நாடுகள் மீது வெறுப்பை வளர்ப்பது தேசியவாதம் ஆகாது.
நமது நாடு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நேரத்தில் உத்தரப் பிரதேச அரசு மருத்துவமனையில் ஆக்சிஸன் இல்லாமல் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்துவிட்டனர். இந்த சூழ்நிலையில் நாம் எப்படி மகிழ்ச்சியாகவும், மன நிறைவுடனும் சுதந்திர தினத்தைக் கொண்டாட முடியும். குழந்தைகளின் உயிரிழப்பு என்பது மீண்டு வர முடியாத இழப்பாகும்.
ஜாதி, மதம், இனம், மொழி, கலசார வேறுபாடுகளைக் கடந்த நமது முன்னோர்கள் தேச விடுதலைக்காக பாடுபட்டார்கள். நாட்டின் ஜனநாயகக் கொள்கைகள், மதச்சார்பின்மை மதிக்கப்படுவது, பன்முகத்தன்மையைப் போற்றுவது ஆகியவற்றை கொண்டுதான் தேசியவாதம் மதிப்பிடப்படுகிறது. நமது நாட்டில் தேசியவாதத்தில் விஷத்தை ஏற்றவும், அதனை நீர்த்துப் போகச் செய்யவும் பல வகையில் முயற்சிகளை நடக்கிறது. பொதுமக்கள் ஒன்றிணைந்து அவர்களைத் தோற்கடிக்க வேண்டும்.
குறுகிய மனப்பான்மையுடன் பேசப்படும் தேசியவாதம் என்பது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பெரும் தீங்கை மட்டும் உருவாக்கும்.
நமது நாட்டில் சிறுபான்மையின மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள் என்று முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். நாட்டில் அடிப்படை நீதிநெறிகளைக் காப்பதன் மூலமும், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளை மதிப்பதன் மூலமும்தான் நாட்டு மக்களிடையே ஒற்றுமையைக் காக்க முடியும் என்றார் பினராயி விஜயன்.