முகப்பு
இந்தியா

நீட் விலக்கு குறித்து ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்குள் தமிழகத்தின் அவசர சட்டம்: மத்திய அரசு 

நீட் விலக்கு குறித்து ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்குள் தமிழகத்தின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தரப்படுமென்று : மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:40 PM
பகிர்:

புதுதில்லி: நீட் விலக்கு குறித்து ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்குள் தமிழகத்தின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தரப்படுமென்று : மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது

நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் மாணவர்கள் சார்பில் வழக்குரைஞர் நளினி சிதம்பரம் தொடர்ந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மருத்துவக் கலந்தாய்வை நடத்துவதில் தாமதம் ஏன் என்று உச்ச நீதிமன்றம் தமிழகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.

அத்துடன் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க எதன் அடிப்படையில் மத்திய அரசு இசைவு தெரிவித்தது என்று இன்று மதியம் 2 மணியளவில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே வேணுகோபாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில், தமிழக அரசின் செயல்பாட்டில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது என்று மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவக் கவுன்சில் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

மேலும், அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகம் மட்டுமே எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டுமே விலக்கு அளிக்க முடியும் என்று திட்டவட்டமாகக் கூறிய நிலையிலும், இந்த ஆண்டு மீண்டும் விலக்குக் கோரியுள்ளது என்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

மேலும், மருத்துவக் கலந்தாய்வை நடத்த தமிழக அரசுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கக் கூடாது என்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் சட்ட முன்வரைவுக்கு, மத்திய அரசின் 3 துறைகள் அனுமதி அளித்துள்ள நிலையில் இந்திய மருத்துவக் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.    

இந்நிலையில் மதியம் நீதிமன்றம் கூடியதும் மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே வேணுகோபாலுக்கு பதிலாக வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் நீதிமன்றத்தில், நீட் விலக்கு குறித்து ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்குள் தமிழகத்தின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தரப்படும் என்று தெரிவித்தார். அதன்படி உடனடியாக சட்டமானது அமலுக்கு வருமென்று தெரிகிறது.

அதேபோல தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மற்றும் மத்திய அரசின் வழக்கறிஞர் இருவரும் அவசர சட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று வாதிட்டனர்  சட்ட சிக்கல் எதுவும் இல்லை என்பதாலேயேதான் அவசர சட்டத்திற்கு அனுமதி தரப்பட்டு உள்ளதாக மத்திய அரசின் வழக்கறிஞரும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.