பிரியங்காவுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
காங்கிரஸ் தலைவர் சோனியா மகள் பிரியங்கா, டெங்கு காய்ச்சலால் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா மகள் பிரியங்கா டெங்கு காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டார். இதையடுத்து தில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அந்த மருத்துவமனையின் தலைவர் டாக்டர் டி.எஸ். ராணா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா உடல்நிலை சரியில்லாமல் இங்கு வந்தார். இதையடுத்து அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
எனவே, மருத்துவமனையில் தங்கி தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். தற்போது அவரது உடல்நலம் சிறிது மேம்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு இம்மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், இதய சிகிச்சை நிபுணருமான டாக்டர் அரூப் பாஸு சிகிச்சை அளித்து வருகிறார்.
விரைவில் அவர் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்புவார் என்றார்.
இதனிடையே, ஆகஸ்ட் 19 வரை தில்லியில் 325 பேர் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆகஸ்ட் 21-ந் தேதி 12 வயது சிறுவன் ஒருவன் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்ததாகவும் தெற்கு தில்லி மாநகராட்சி அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.