ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு, வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.500, ரூ.1,000 பணத்தில், ஒரு குறிப்பிட்ட தொகை, கருப்புப் பணமாக இருக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய நிதியமைச்சகம் சார்பில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மக்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்வதற்காக, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை மத்திய அரசு கொண்டுவரவில்லை. கருப்புப் பணம், கள்ள நோட்டுகள் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும்; பயங்கரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பது தடுக்கப்பட வேண்டும்; வங்கி சுழற்சிக்கு வராத பணம், வங்கி சுழற்சிக்கு கொண்டுவரப்பட வேண்டும்; வரி விதிப்பை விரிவுபடுத்த வேண்டும்; ரொக்கப் பரிவர்த்தனையைக் குறைத்து, மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் ஆகிய காரணங்களுக்காக, உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டன.
இந்த நடவடிக்கையால், மக்கள் தாங்கள் வைத்திருக்கும் பணத்தை வங்கியில் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால், சட்ட விரோதமாக, வரி செலுத்தாமல் வைத்திருந்த தொகைக்கு வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால், கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக, தங்களது ஆட்சிக் காலத்தில் ஒரு சிறு நடவடிக்கையை கூட எடுக்காத சிலர், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. (ப.சிதம்பரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டார் ). ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு, புழக்கத்தில் இருந்த ரூ.15.44 லட்சம் கோடியில், ரூ.15.28 லட்சம் கோடி வங்கி சுழற்சிக்கு வந்துவிட்டன. அவற்றில், ஒரு குறிப்பிட்ட தொகை, கருப்புப் பணமாக இருக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.