மும்பை: தெற்கு மும்பையின் பேண்டி பஜார் பகுதியில் இருந்த 3 மாடிகளைக் கொண்டு கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகினர். 13 பேர் காயமடைந்தனர்.
ஜேஜே மருத்துவமனைக்கு அருகே அமைந்திருந்த இந்த கட்டத்தில் 12 அறைகளும், 6 கிடங்குகளும் இருந்த நிலையில், இன்று காலை 8.30 மணியளவில் திடீரென இந்த கட்டடம் சரிந்து விழுந்தது.
இந்த கட்டடத்தில் 9 குடும்பங்கள் வசித்துவந்ததாகவும், 30க்கும் மேற்பட்டோர் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
தீயணைப்புப் படை வீரர்களுடன், பேரிடர் மேலாண்மைக் குழுவினர் சம்பவப் பகுதிக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட மீட்புப் பணியில் 12 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், மழையால் சேதமடைந்து இந்த கட்டடம் விழுந்ததா? அல்லது மோசமான நிலையில் இருக்கும் கட்டடங்களின் பட்டியலில் இந்த கட்டடம் இடம்பெற்றிருந்ததா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.