நோய்வாய்ப்பட்ட காலத்தில் ஒரு நாளைக்கு ரூ.750 உதவித்தொகை: ஓட்டுநர்களுக்கு ‘ஓலா’ நிறுவனத்தின் ஓஹோ காப்பீட்டுத் திட்டம்!
தங்களுடன் இணைந்து செயல்படும் ஓட்டுநர்களுக்கு, அவர்கள் நோய்வாய்ப்பட்டு வாகனம் ஓட்ட முடியாத நாட்களில், ஒரு நாளைக்கு ரூ.750 உதவித்தொகை வழங்கும் வகையில் புதிய காப்பீட்டுத் திட்டம் ...
புதுதில்லி: தங்களுடன் இணைந்து செயல்படும் ஓட்டுநர்களுக்கு, அவர்கள் நோய்வாய்ப்பட்டு வாகனம் ஓட்ட முடியாத நாட்களில், ஒரு நாளைக்கு ரூ.750 உதவித்தொகை வழங்கும் வகையில் புதிய காப்பீட்டுத் திட்டம் ஒன்றை ‘ஓலா’ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் அலைபேசி செயலி வழியாக வாடகைக் கார் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஓலா கேப்ஸ் ஒன்று, இந்நிறுவனம் 2010 டிசம்பரில்துவங்கப்பட்டது.
தற்பொழுது தங்களுடன் அவர்களது வாகனங்களை இணைத்து, ஓலா நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஓட்டுநர்களும் பயன்பெறும் வகையில் புதிய காப்பீட்டுத் திட்டம் ஒன்றைத் தொடங்க ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி பஜாஜ் அலையன்ஸ் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து ‘சலோ பெபிகார்’ என்னும் பெயரில் புதிய காப்பீடு திட்டம் வழங்கவுள்ளது.
இதன்படி ஓலா நிறுவனத்தில் பதிவு செய்து ஆயுள் காப்பீடு எடுக்கும் ஓட்டுநர்களின் குழந்தைகள் படிப்பு செலவுக்காக ஆண்டிற்கு அதிகபட்சமாக 24 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.
மேலும் குறிப்பிட்ட ஓட்டுநர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வாகனம் ஓட்ட முடியாமல் போகும் பட்சத்தில் அவருக்கு நாள் ஒன்றுக்கு 750 ரூபாய் வீதம் முன்று மாதம் வரையில் உதவித்தொகை வழங்கப்படும். இதுவும் ஆண்டிற்கு ஒரு முறை வழங்கப்படும். அத்துடன் விபத்துக் காப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் ஓலா நிறுவன ஓட்டுநர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிக பயன்களைப் பெறலாம் என்று ஓலா நிறுவன தலைமைச் செயல் அதிகாரி விஷால் கவுல் தெரிவித்தார்.